தமிழீழ போராட்டம் மீண்டும் வெடிக்கும்! எச்சரிக்கை விடுத்துள்ள தமிழகக்கட்சி
ஒற்றையாட்சி முறைமையைத் திணிக்க இலங்கை அரசு எடுக்கும் எந்தவொரு முயற்சியும் புதுப்பிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு வழிவகுக்கும் என்று தமிழகக் கட்சி ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழர்களுக்கு அர்த்தமுள்ள சுயாட்சியுடன் கூடிய கூட்டாட்சி அமைப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழீழப் போராட்டம் வெடுக்கும்
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
-ஈழத் தமிழ் அரசியல் கட்சிகளின் சில தலைவர்கள், ஒற்றையாட்சி முறைமையை வலுப்படுத்தும் நோக்கில் அரசமைப்புத் திருத்தங்களைத் திட்டமிட்டு வருகின்றனர். இது, சிங்கள பெரும்பான்மை வாதத்தை மேலும் ஊக்குவிக்கிறது.

இரண்டு தேசிய இனங்கள் வசிக்கும் நாட்டில் இதுபோன்ற நடவடிக்கைகள் ஆபத்தானவை மற்றும் கண்டிக்கத்தக்கவை.
கடந்த 1987 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இந்திய- இலங்கை ஒப்பந்தம், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைப்பதன் மூலம் தமிழர்களுக்கு சுயாட்சியுடன் கூடிய கூட்டாட்சி அமைப்பைக் கருத்தில் கொண்டுள்ளது.
இருப்பினும், இலங்கை அரசு இதனைச் செயற்படுத்த மறுக்கிறது. 13 ஆவது அரசமைப்பு திருத்தம், தமிழர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்குப் பதிலாக, அவர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக குறைத்துவிட்டது.
விடுதலைப்புலிகள் இல்லாத நிலையிலும், தமிழர் விடுதலைப்போராட்டத்தின் மூல காரணங்கள் நீடிக்கின்றன.
இந்த நிலையில், சுயாட்சியை நிரந்தரமாக மறுக்கும் எந்தவொரு அரசமைப்பு மாற்றமும் ஈழத் தமிழர்களிடையே அடக்கப்பட்ட விடுதலை உணர்வுகளை மீண்டும் தூண்டிவிட்டு இலங்கையின் எதிர்காலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.