கட்சியின் தலைமை பதவியில் உடனடி மாற்றம் வேண்டும்: தயாசிறி வலியுறுத்தல்
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமை பதவியில் மாற்றம் அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தியுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் பொழுதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தலைமை பதவியில் மாற்றம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் அந்தக் கட்சியைக் கட்டியெழுப்ப முடியாது.
தற்போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது மூன்று அணிகளாகப் பிளவுபட்டுள்ளன.

இதன்படி, நிமல் சிறிபால டி சில்வா அணி, தயாசிறி தரப்பு மற்றும் மைத்திரி குழு என மூன்றாக பிரிந்து செயற்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நிமல் சிறிபால டி சில்வா அணியும், மைத்திரி தரப்பும் இணைந்து, விஜயதாஸ ராஜபக்சவுக்கு உப தலைவர் பதவி வழங்கியது. எனினும், நான் தான் அந்தக் கட்சியின் சட்டபூர்வ செயலாளர்.
கட்டியெழுப்ப இதுவே வழி
விஜயதாச ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட நியமனத்தையும் அவர் சவாலுக்கு உட்படுத்தி உள்ளார். இதனால் தலைமை பதவியில் மாற்றம் வேண்டும்.

கிராமிய மட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விழுந்துள்ளது. தலைமைத்துவ மாற்றம் இன்றி இதனை கட்டியெழுப்ப முடியாது.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியைத் தனக்கு வழங்குமாறும் தவிசாளர் பதவியை நிமல் சிறிபால டி சில்வாவுக்கு வழங்குமாறும் பரிந்துரை செய்து பேசியிருக்கிறார்.