தமிழர் தாயகப்பகுதிகளில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ள தமிழர் சுயாட்சிக் கழகம்
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அனந்தி சசிதரன் தலைமையிலான தமிழர் சுயாட்சிக் கழகம் எதிர்வரும் திங்கட்கிழமை வடக்கு - கிழக்கு தமிழர் தாயகப்பகுதிகள் தழுவிய ரீதியில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் கிளிநொச்சியில் இன்றையதினம் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
நேற்றைய தினம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டிருந்தது.
யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாகவே இந்த தூபி அமைக்கப்பட்டது. எனவே இதனை பல்கலைக்கழக துணைவேந்தர் அழித்தமை கவலையளிப்பதாக உள்ளதாக பலதரப்பட்ட அரசியல்வாதிகளும், தமிழ்நாட்டின் அரசியற் தலைவர்களும் கண்டனம் வெளியிட்டிருந்தனர்.
எனவே ,இந்த சம்பவத்தை கண்டித்து எதிர்வரும் 11 ஆம் திகதி பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளதாகவும், இதற்கு ஆதரவாக வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி ஆதரவை வழங்க வேண்டுமெனவும், முஸ்லிம்களும் இதற்கு ஆதரவளிக்க வேண்டுமெனவும் இதன்போது அனந்தி சசிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.