மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்: ஜீவன்
மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பான விசேட கலந்துரையாடலை ஜனாதிபதியுடன் மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து நேற்றைய தினம் (22.11.2022) அவர் இந்த விடயத்தினை கூறியுள்ளார்.
இந்த கலந்துரையாடலில் அனைத்து மலையக அரசியல் பிரதிநிதிகளும் கலந்துகொள்ள வேண்டும் என ஜீவன் தொண்டமான் கேட்டுக்கொண்டுள்ளார்.
தொழிற்சங்கப் போராட்டம்
அக்கரப்பத்தன பெருந்தோட்ட நிறுவனத்துக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் தொழிற்சங்கப் போராட்டத்துக்கு சம்பந்தப்பட்ட கம்பனி உரிய தீர்வை வழங்கத் தவறுமானால் நுவரெலியா மாவட்டத்திலும் அந்தப் போராட்டம் விரிவுபடுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு இலங்கையராக வரவு செலவுத் திட்டத்தை வரவேற்கும் அதேவேளை, மலையகத்துக்கு
அதில் எதுவுமே வழங்கப்படாததால் மலையகத் தமிழன் என்ற வகையில் கவலையடைவதாகவும்
அவர் குறிப்பிட்டுள்ளார்.