தோல்வியடைந்த தாஜ் சமுத்ரா மீதான முதல் இலக்கு! ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வெளிவரும் பல மர்மங்கள்
ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பாக முக்கிய தகவல் ஒன்று இன்று நாடாளுமன்றத்தில் வெளியானது.
கடந்த 2019 ஏப்ரல் 20ஆம் திகதி, குண்டுத் தாக்குதலில் ஈடுபட்ட அப்துல் லதீப் முகம்மட் ஜமீல் கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் தங்கியவுடன், அந்த ஹோட்டல் மின்னஞ்சல் மூலம் தேசிய புலனாய்வுப் பிரிவான எஸ்.ஐ.எஸ்-ஐ (SIS) இற்கு உடனடியாக எச்சரித்திருந்தது என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
மாறிய இலக்கு..
இந்த எச்சரிக்கை தொடர்பில் தேசியப் புலனாய்வுப் பிரிவு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், ஜமீல் ஏற்கனவே பாதுகாப்பு கண்காணிப்பு பட்டியலில் இருந்தவராகவும், அது தொடர்பான தகவல்களும் இருந்தன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அப்துல் ஜமீல், ஈஸ்டர் ஞாயிறு (ஏப்ரல் 21, 2019) தினம் இடம்பெற்ற தாக்குதல்களில் தாஜ் சமுத்ரா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுவெடிப்பு நடத்த வேண்டியவராக இருந்தார்.
ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்ததால், அவர் இடம் மாற்றி, பின்னர் தெஹிவளையில் உள்ள டிராபிகல் இன் விடுதியில் குண்டுகளை வெடிக்கச் செய்து உயிரிழந்தார். ஈஸ்டர் தாக்குதல்களில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.