ஃபேஸ்புக் மூலமாக வாகன மோசடி - பிரதான சந்தேகநபர் கைது
ஃபேஸ்புக் ஊடாக விளம்பரம் செய்து வாகனங்களை விற்பனை செய்துவிட்டு, பின்னர் அந்த வாகனங்களை மீண்டும் கொள்ளையடிக்கும் பாரிய மோசடியுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் யக்கல பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவர் ஆவார்.
விற்பனை செய்வதாக விளம்பரப்படுத்தி
ரூபாய் 40 இலட்சம் பணம் செலுத்தி கொள்வனவு செய்யப்பட்ட வேன் ஒன்றை, ஆயுதமேந்திய குழுவினர் மிரட்டி கொள்ளையடித்ததாக ஜூலை முதலாம் திகதி பொலிஸ் மா அதிபர் நிவாரணப் பிரிவில் நபர் ஒருவர் முறைப்பாடு செய்திருந்தார்.
இம்முறைப்பாடு தொடர்பில் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

அதற்கமைய, இந்த மோசடிச் சம்பவத்துடன் பெலும்மஹர, முந்துங்கொட பகுதியில் அமைந்துள்ள வாகன விற்பனை நிலையத்தின் உரிமையாளர் உட்பட சுமார் 10 பேர் தொடர்புபட்டுள்ளமை கண்டறியப்பட்டது.
இந்தநிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கடந்த 13ஆம் திகதி யக்கல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் முகநூல் மூலம் வாகனங்களை விற்பனை செய்வதாக விளம்பரப்படுத்தி, அவற்றை விற்பனை செய்த பின்னர், திட்டமிட்ட முறையில் அந்த வாகனங்களைப் பின்தொடர்ந்து சென்று ஆயுத முனையில் கொள்ளையடித்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் இரு கொள்ளைச் சம்பவங்கள்
இந்தக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் வாகன விற்பனை நிலையத்தின் உரிமையாளர் மற்றும் ஏனைய சந்தேகநபர்கள் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பியோடியுள்ளனர்.
நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலகெடிஹேன பகுதியில் அமைந்துள்ள வாகன விற்பனை நிலைய உரிமையாளரின் வீட்டில் சோதனையிட்ட அதிகாரிகள், அங்கிருந்த 2 வாள்கள், 2 பிஸ்டல் மெகசின்கள், 3 தோட்டாக்கள் மற்றும் ஜீப் வண்டியொன்றை பொலிஸ் பொறுப்பில் எடுத்துள்ளனர்.

இதேபோன்ற முறையில் நடத்தப்பட்ட மேலும் இரண்டு கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் இவர்களுக்கு எதிராக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று (14) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, நாளை (16) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
you may like this video