சிரியாவின் சர்ச்சைக்குரிய அல்-ஹோல் முகாம் மூடல்: ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வெளியேற்றம்
ஐ.எஸ்.ஐ.எல் (ISIL) ஆயுதக் குழு உறுப்பினர்களின் உறவினர்கள் ஆயிரக்கணக்கானோர் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிரியாவின் அல்-ஹோல் (Al-Hol) அகதி முகாம் மக்கள் வெளியேற்றப்பட்டு முழுமையாக மூடப்பட்டுள்ளதாக சிறிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடகிழக்கு ஹசாக்கா மாகாணத்தில் அமைந்துள்ள இந்த முகாமிலிருந்து எஞ்சியிருந்த கடைசி குடியிருப்பாளர்களும் ஞாயிற்றுக்கிழமை காலை வாகனத் தொடரணி மூலம் வெளியேற்றப்பட்டதாக முகாம் கண்காணிப்பு அதிகாரி ஃபாடி அல்-காசெம் உறுதிப்படுத்தியுள்ளார்.
முகாம் மூடல்
2019 ஆம் ஆண்டில் சுமார் 73,000 பேரை கொண்டிருந்த இந்த முகாமில், கடந்த மாதம் வரை சிரியர்கள், ஈராக்கியர்கள் மற்றும் 40 நாடுகளைச் சேர்ந்த 6,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் என சுமார் 24,000 பேர் தங்கியிருந்தனர்.

சமீபத்தில் குர்திஷ் படைகளிடமிருந்து இந்த முகாமின் கட்டுப்பாட்டை சிரிய அரசு ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் பல்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சிரிய நாட்டு மக்கள் பலர் தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ள நிலையில், வெளிநாட்டினர் சிலர் அலெப்போ மற்றும் இட்லிப் மாகாணங்களை நோக்கிச் சென்றுள்ளனர்.
குடும்பங்கள் வெளியேற்றம்
இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பதால், அவர்கள் மீண்டும் சமூகத்துடன் இணைவதற்குத் தேவையான ஆதரவு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், வெளிநாட்டினரைத் தாய்நாட்டிற்குத் திருப்புவதில் சிக்கல்கள் நீடிக்கின்றன. குறிப்பாக, ரோஜ் (Roj) முகாமிலிருந்து அவுஸ்திரேலியா திரும்ப முயன்ற 34 பெண்கள் மற்றும் குழந்தைகளைத் திருப்பி அனுப்ப சிரிய அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் இணையச் சென்றவர்கள் மீது தங்களுக்கு அனுதாபம் இல்லை என்றும், அவர்களை மீண்டும் நாட்டுக்குள் அழைக்கும் திட்டம் தற்போது இல்லை என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.