கிளிநொச்சி வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை கூடத்திற்குள் வாள்வெட்டு தாக்குதல்!
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை கூடத்தின் வாசலில் இடம்பெற்ற வாள் வெட்டு தாக்குதலில் ஏற்கனவே வாள்வெட்டில் காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்குள் உள்நுழைந்த மூவர் பார்வையாளர்கள் போன்று சென்று குறித்த நோயாளியின் பெயரை குறிப்பிட்டு விசாரித்துள்ளனர்.
இதன்போது அங்கு கடமையிலிருந்த உத்தியோகத்தர் நோயாளி சத்திர சிகிச்சை கூடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அவர்கள் வைத்தியசாலையின் முதலாவது மாடியில் உள்ள சத்திர கிசிச்சை கூடத்தின் வாசலுக்குள் சென்று அங்கு சிகிச்சைக்காக காத்திருந்த தாம் தேடிச் சென்ற நபரை வாசலில் வைத்து வெட்டியுள்ளனர்.
இதன்போது, வெட்டுக்காயங்களுக்குள்ளான நபர் சத்திர கிசிச்சை கூடத்திற்குள் ஓடிய நிலையில், தாக்குதலை மேற்கொண்ட நபர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றுள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் உடனடியாக அருகில் உள்ள கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கிய போதும் அரை மணித்தியாலயங்களுக்கு பின்னரே சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.