மொரவெவ பிரதேச சபை உறுப்பினர் மீது வாள்வெட்டு தாக்குதல் - சந்தேகநபர் தப்பியோட்டம்
திருகோணமலை - மொறவெவ பிரதேச சபை உறுப்பினரொருவர் வாள்வெட்டு தாக்குதலினால் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று (21) திகதி மாலை இடம்பெற்றுள்ளது.
பிரதேச சபை உறுப்பினரை தாக்கிய சந்தேகநபர் முச்சக்கர வண்டியில் வருகை தந்துள்ள நிலையில் முச்சக்கர வண்டியை விட்டு தப்பியோடியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
குறித்த சம்பவத்தில் மொரவெவ - நாமல்வத்த பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே காயமடைந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
அரசியல் கூட்டம் ஒன்றிற்கு சென்று வீடு திரும்பி கொண்டிருந்த வேளையில் முச்சக்கர வண்டியில் வருகை தந்த சந்தேகநபர் வாளால் வெட்டியதாக ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
இதன்போது வாள் வெட்டுக்கு இலக்கான பிரதேச சபை உறுப்பினர் 1990 வண்டி மூலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவருகின்றது.
சம்பவம் குறித்து மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.