சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மரணத்தில் சந்தேகம் : மக்கள் போராட்டம் (VIDEO)
டயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயகம மேற்கு தோட்டம் 5ம் பிரிவில் பெண் ஒருவர் ஆற்றில் சடலமாக மீட்க்கப்பட்டமை தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்து குறித்த தோட்டத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது, இன்று (10) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 06ம் திகதி மாலை 5 மணியளவில் சாமிநாதன் தங்கேஸ்வரி என்ற 53 வயதுடைய பெண் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், குறித்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்து தோட்டத்தில் சுமார் 100 பேர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வீதிக்கு இறங்கி பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி கறுப்பு கொடி பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் தோட்டத்தில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு முன்பாக பேரணியாக வந்து, குறித்த பெண் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
பொலிஸார் சரியான விசாரணை முன்னெடுத்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் பிரேத பரிசோதனையின் போது இறந்தவரின் உடலை பார்க்கவிடாமல் பெட்டி திறக்கப்படாமல் நல்லடக்கம் செய்ய பொலிஸார் அனுமதி வழங்கியதாகவும், ஆற்றில் மிதந்த சடலம் உடையின்றி கிடந்தமையால் இதில் சந்தேகம் நிலவுவதாக போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
சந்தேகத்துக்கு இடமான இந்த செயலில் நீதி வேண்டும், முறைக்கேடான விடயங்கள் நடந்திருப்பின் சட்டத்தின் முன் குற்றவாளி முன்னிருத்தப்பட வேண்டும் என்பதையும், பிரேத பரிசோதனை அறிக்கை திருப்தி இல்லை எனவும், இது தொடர்பான அறிக்கை பொலிஸாரால் உறவினர்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் போராட்டகாரர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
எனவே பொலிஸார் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
டயகம பகுதியில் ஆற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

