வவுனியா மாநகரசபை முதல்வர் மற்றும் பிரதிமுதல்வரின் பதவிகளுக்கு இடைக்காலத்தடை
வவுனியா மாநகரசபையின் முதல்வர் மற்றும் பிரதிமுதல்வர் ஆகியோர் அந்த பதவிகளை வகிப்பதற்கு இடைக்காலத் தடை உத்தரவை விதித்து கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (21.10.2025) உத்தரவிட்டுள்ளது.
வவுனியா மாநகரசபை உறுப்பினர்களான க.பிரேமதாஸ் மற்றும் சு.விஜயகுமார் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்திற்கமைய, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கின் பிரதிவாதிகளாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த மாநகர முதல்வர் சு.காண்டீபன், ஜனநாயக தேசிய கூட்டணியைச் சேர்ந்த பிரதி முதல்வர் ப.கார்த்தீபன் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
தடை உத்தரவு
குறித்த மனுவில் வவுனியா மாநகர சபையின் முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் தெரிவின் போது, பிரதிவாதிகள் சட்டத்திற்கு முரணான வகையில் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பிரதி முதல்வர் ப.கார்த்தீபன் மாநகரசபை எல்லைக்குள் வசிக்காத ஒருவராக உள்ளார்.
எனவே, குறித்த இருவரும் அந்தப் பதவிகளில் இருப்பதற்கு தகுதியற்றவர்கள் என்ற அடிப்படையில் அவர்களின் பதவிகளை செல்லுபடியற்றதாக அறிவிக்குமாறு கோரி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இவற்றை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், மனு மீதான விசாரணைகள் முடிவடையும் வரை முதல்வர் மற்றும் பிரதிமுதல்வர் ஆகியோர் அந்தப் பதவிகளை வகிப்பதற்கு இடைக்காலத் தடை உத்தரவினை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 19ஆம் திகதி வரை இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



