வெளிநாடுகளிலிருந்து போதைப்பொருள் கடத்தல்: உடனடியாக கைது செய்ய உத்தரவு
வெளிநாடுகளில் இருந்து கொண்டு, இலங்கையில் போதைப்பொருள் கடத்தல்களை மேற்கொள்வதாக கூறப்படும் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களான செஹான் சத்சாரா அல்லது "தெஹி பலே மல்லி" மற்றும் அவரது சகோதரர் துஷான் நெத்சாரா அல்லது "களு மல்லி" ஆகியோரை உடனடியாகக் கைது செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
சந்தேகநபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகமவும் இந்த சந்தேகநபர்களுக்கு பயணத் தடைகளையும் விதிக்க உத்தரவிட்டுள்ளார்.
அண்மையில், தென் பகுதி கடலில் மிதந்த பொதிகளில் காணப்பட்ட 839 கிலோகிராம் 'ஐஸ்', ஹெரோயின் மற்றும் ஹாஷிஷ் ஆகியவற்றை இலங்கை கடற்படை கைப்பற்றியது.
போதைப்பொருள் கடத்தல்
இந்த நிலையில், தெவிந்துறையை சேர்ந்த "தெஹி பலே மல்லி" மற்றும் "களு மல்லி" ஆகியோரே, இந்த போதைப்பொருட்களை நாட்டிற்கு கொண்டு வந்ததற்குக் காரணம் என்று, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் (PNB) இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இந்த சந்தேகநபர்கள் டுபாய் அல்லது வேறு வெளிநாட்டில் ஒளிந்து இந்த போதைப்பொருள் கடத்தலை நடத்தி வருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், சம்பந்தப்பட்ட இரண்டு நபர்களின் தொலைபேசி பதிவுகளை கோருவதற்கான உத்தரவைப் பிறப்பிக்குமாறும் பொலிஸார் நீதிமன்றத்தை கோரியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



