கல்வி நடவடிக்கைகள் நடைபெறாது! இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் யாழ். மாவட்டச் செயலாளர்
வடக்கு - கிழக்கில் நாளை (24.04.2023) முன்னெடுக்கப்படவுள்ள நிர்வாக முடக்கலினால் கல்வி நடவடிக்கைகள் நடைபெறாது என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் யாழ். மாவட்டச் செயலாளர் ஜெயராஜ் குலேந்திர வொல்வின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "கடந்த காலத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் விளைவுகளை நாம் முழுமையாக அனுபவித்துள்ளோம்.
இந்த நிலையில் புதிதாகக் கொண்டுவரப்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தால் மக்கள் எதிர்காலத்தில் பாதிக்கப்படுவார்கள்.
வடக்கு - கிழக்கில் உள்ள பொது அமைப்புக்கள் சார்பாக ஆதரவை வழங்குவதோடு ஒவ்வொரு ஆசிரியரும் நிர்வாக முடக்கலுக்கு ஆதரவு வழங்கி வலுச்சேர்க்குமாறு கோருகின்றோம்" என தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணிகள் முடக்கம்
நாளைய தினம் (25.04.2023) முன்னெடுக்கப்படும் நிர்வாக முடக்கலுக்கு வவுனியா வலய சட்டத்தரணிகள் சங்கம் முழுமையான ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளது.
இதனால் நீதிமன்றில் நாளைய தினம் சட்டத்தரணிகள் முன்னிலையாகமாட்டார்கள் எனவும் இந்த சங்கம் அறிவித்துள்ளது.
சந்தைகள் முடக்கம்
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாளை இடம்பெறவுள்ள கடையடைப்புப் போராட்டத்துக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக வடக்கு மாகாண சந்தை வியாபாரிகள் ஒன்றியத்தின் தலைவர் சின்னத்துரை முகுந்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு எதிராகவும் தமிழ் மக்களின் பூர்வீக இன, மத அடையாளங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராகவும் மேற்கொள்ளப்படுகின்ற இந்த கடையடைப்புப் போராட்டத்துக்கு வடக்கு மாகாண சந்தை வியாபாரிகள் ஒன்றியம் முழுமையான ஆதரவை வழங்குவதற்கு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளோம்.
வடக்கு மாகாண சந்தை வியாபாரிகள் அன்றாடம் தமது வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டே வாழ்வாரத்தை கொண்டு சென்று கொண்டிருக்கக் கூடிய இக்கட்டான நேரத்திலும் கூட தமிழ் மக்களின் இருப்பைக் காப்பதற்கான இவ்வாறான போராட்டங்களுக்கு எமது வாழ்வாதாரத்தையும் தாண்டி ஒத்துழைப்பைக் கொடுக்க வேண்டிய கடப்பாட்டில் உள்ளோம்.
ஆகவேதான் இந்த கடையடைப்பு போராட்டத்துக்கு வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து சந்தைகளிலும் உள்ள வியாபாரிகள் வியாபார நடவடிக்கையில் ஈடுபடாமல் ஒத்துழைப்பை வழங்குவதற்கு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளோம்" என்றார்.
தனியார் ஊழியர்கள் முடக்கம்
வடக்கு மாகாணத்தை சேர்ந்த தனியார் ஊழியர்கள் எவரும் நாளையதினம் (25.04.2023) பணிக்கு செல்ல தேவையில்லை என வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
நாளைய பொது முடக்கம் தொடர்பில் யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தனியார் வர்த்தக ஊழியர் சங்கத்தின் தலைவர் தலைவர் சாமிநாதன் சிவகுமார் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அழகு நிலையங்கள் பூட்டு
வடக்கு - கிழக்கில் நாளை இடம்பெறவுள்ள கடையடைப்பு போராட்டத்துக்கு வடக்கு மாகாண அழகு சங்கங்களின் சமாசம் முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளது.
இது குறித்து சமாசத் தலைவர் உதயசங்கர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், வடக்கு, கிழக்கு அழகு நிலைய சங்கங்கள் ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் பல பங்களிப்புக்களை வழங்கியுள்ளன.
ஜனநாயகப் போராட்டங்கள் அனைத்துக்கும் கட்டமைக்கப்பட்ட ஒரு அமைப்பாக முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கியுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட தனியார் பேருந்து சங்கத்தின் ஆதரவு
வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் நாளையதினம் (25.04.2023) இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு தெரிவித்துள்ளது.
இன்று வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைமையத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே நாளை இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கான ஆதரவை வழங்குவது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கூட்டத்தில் வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் சி. சிவகரன், யாழ் பிராந்திய கூட்டு இணைக்கப்பட்ட பஸ் கம்பனிகளின் இணையத்தின் தலைவர் பொ.கெங்காதரன், முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் நா.சற்குணராசா, மன்னார் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பு. நாகரூபன், வவுனியா மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ். ரி. ராஜேஸ்வரன், கிளிநொச்சி தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தி. கிருஷ்ணன் ரூபன் ஆகியோர் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தி-சான்
முல்லைத்தீவு முடக்கம்
வடக்கு கிழக்கு தழுவிய பூரண நர்வாக முடக்கலுக்கு ஆதரவு வழங்கும் விதமாக நாளை(25.04.2023) விசுவமடு, உடையார்கட்டு, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, முள்ளியவளை, ஒட்டுசுட்டான், மாங்குளம்,மல்லாவி ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்படும் என முல்லைத்தீவு வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை நாடாளுமன்றில் கொண்டுவரப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு தங்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்துவதாகவும் அதற்கு அமைவாகவே இந்த நிர்வாக முடக்கம் முன்னெடுக்கப்பட்டுள்தாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்தி- கீதன்