வேட்டையாடப்பட்ட ஐந்து உடும்புகளை வைத்திருந்த சந்தேகநபர் ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை
வேட்டையாடப்பட்ட ஐந்து உடும்புகளை வைத்திருந்த நிலையில் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட நபர் ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரை நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே சந்தேகநபரை சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கிளிநொச்சி - வட்டக்கச்சி, புதுக்காட்டுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காட்டில் ஐந்து உடும்புகளை வேட்டையாடி உயிருடன் இறைச்சியாக்குவதற்கு தயாராக வைத்திருந்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது.
இந்த நிலையிலேயே சந்தேகநபர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ள அதேவேளை இதன்போது குறித்த வழக்கானது எதிர்வரும் ஐந்தாம் மாதம் 10ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் கைப்பற்றப்பட்ட உடும்புகளை காட்டில் விடுமாறு பணிப்புரை விடுக்கப்பட்ட நிலையில் உடும்புகள் சுண்டிக்குளம் சரணாலயத்தில் நேற்று பிற்பகல் விடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.