போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேகநபருக்கு விளக்கமறியல் நீடிப்பு(Photos)
ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேகநபரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கல்முனை மதிரஸா வீதியில் வைத்து கைதான சந்தேகநபர் தொடர்பிலான வழக்கு நேற்று (10.11.2022) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் மேற்குறித்த உத்தரவை நீதிவான் பிறப்பித்துள்ளார்.
இரகசிய தகவல் பரிமாற்றம்
அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு ஹெரோயின் போதைப்பொருள் தொடர்பில் இரகசிய தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை(07.10.2022) அதிகாலை 2.30 மணியளவில் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை மதிரஸா வீதியில் வைத்து சந்தேகநபர் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதான நபர் கல்முனைகுடி பகுதியை சேர்ந்த 34 வயது மதிக்கத்தக்கவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேகநபரிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருள் 7 கிராம் 870 மில்லிகிராம் உட்பட சந்தேக நபர் பாவித்த கைத்தொலைபேசி என்பன விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கை
விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய நடவடிக்கையை முன்னெடுத்து சந்தேநபரை கைது செய்துள்ளனர்.
இதன் பின்னர் கைது செய்யப்பட்ட நபர் சான்று பொருட்களுடன் கல்முனை தலைமையக பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் நீதிமன்ற நடவடிக்கைக்காக முன்னிலைப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபர் இப்பிராந்தியத்தில் போதைப்பொருள் பிரதான முகவராக செயற்பட்டு வந்துள்ளதாக விசேட அதிரடிப்படையினர் எமது செய்தியாளரிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



