உணவு போதாதெனின் இன்னும் கேட்கலாம்! சுரேஷ் சலேவுக்கு அமைச்சர் அறிவுரை..
சுரேஷ் சலே நலமுடன் இருப்பதாகவும், அவருடைய உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை எனவும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரச தகவல் திணைக்களத்தில் நேற்று(23.06.2026) இடம்பெற்ற, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சுரேஷ் சலே தடுத்து வைக்கப்பட்டுள்ள அறை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவுக்கு என்று பிரத்தியேகமாக எந்தவொரு விசேட அறையும் உருவாக்கப்படவில்லை. எப்போதும் போன்று அங்குள்ள சாதாரண அறையில்தான் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

சலே தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த விசாலமான அறையில், இதற்கு முன்னரும் கூட பலர் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். எனினும், அப்போது எவ்வித முறைப்பாடுகளும் முன்வைக்கப்படவில்லை. அத்துடன் இந்த அறைகள் 2024ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திற்குப் பின்னர் புதிதாக உருவாக்கப்பட்டவை அல்ல.
தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவுக்கு உணவு வழங்கப்படாமல் இல்லை. மாறாக அவர் வாயினால் உணவு உண்ண மறுப்பு வெளியிட்டு வருகின்றமையே இங்கு பிரதான பிரச்சினை.
எனினும், தேசிய வைத்தியசாலையில் அவருக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. அவர் தற்போது சுய நினைவுடன் நடமாடுவதுடன், அவருடைய தனிப்பட்ட வேலைகளை அவரே செய்து கொள்கின்றார்.
வாயினால் அன்றில் மூக்கில் இடப்பட்டுள்ள குழாய் ஊடாக அவருக்கான உணவு வழங்கப்பட்டு வருகின்றது. எனவே அவருக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் சரியாக வழங்கப்பட்டு வருகின்றன.
உயிருக்கு ஆபத்து இல்லை
அவரது வீட்டில் இருந்தும் அவருக்கு உணவு கொண்டு வந்து கொடுக்கப்படுவதுடன், அந்த அளவு போதாது எனின், இன்னும் அதிகமாக அவருடைய மனைவியிடம் கேட்டுப் பெற முடியும். அவ்வாறு கொண்டு வரப்படும் உணவினை அவரது மனைவியே அவருக்கு வழங்கி வருகின்றார்.

எனவே, அடிப்படையில் அவர் எந்தப் பிரச்சினையும் இன்றி இருப்பதால் அவரது உயிருக்கு எவ்வித ஆபத்தும் கிடையாது.
அவர் உணவு உட்கொள்ளாமல் இருப்பதற்காக வெளியே மேடைகளை அமைத்தோ, கூட்டங்கள் மற்றும் ஊடகவியலாளர் சந்திப்புகளை நடத்தியோ அல்லது பூஜைகளை நடத்தியோ எந்தவொரு பயனும் இல்லை.
வெளியே பதாகைகளைக் கட்டுவதை விடுத்து அவரது மனைவியும் பிள்ளைகளும் அவரிடம் சென்று உணவை உட்கொள்ளுமாறு கூறினால் இந்தப் பிரச்சினை உடனடியாக முடிவுக்கு வந்துவிடும்.
நாட்டில் இடம்பெற்ற மிகக் கொடூரமான கொலைச் சம்பவங்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
எனவே, அந்த குற்றப் புலனாய்வு விசாரணை செயல்முறைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதே ஒரு பிரஜையின் பொறுப்பாகும். எனவே அதற்கமைய அவர் செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.