பங்களாதேஷில் இந்து மக்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் !மட்டக்களப்பு இந்து குருமார் பேரவை அறிக்கை
பங்களாதேஷில் நவராத்திரி தினத்திலே இஸ்லாமிய பயங்கரவாதிகளால் இந்து ஆலயங்கள் தாக்கப்பட்டு இந்து துறவி உட்பட இந்து மக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து இந்து அமைப்புக்கள், இந்து ஆலயங்கள், இந்து நிறுவனங்களின் கூட்டமைப்பினால் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு பூரண ஆதரவு வழங்கவுள்ளதாக மட்டக்களப்பு இந்து குருமார் பேரவையின் செயலாளர் சிவஸ்ரீ க. ஜேயச்சந்திரன் குருக்கள் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட இந்து குருமார் பேரவை இன்று (27) போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பங்களாதேஷில் நவராத்திரி தினத்திலே இஸ்லாமிய பயங்கரவாதிகளால் இந்து ஆலயங்கள், தாக்கப்பட்டு இந்துக்களின் வீடுகள், கடைகள் தீக்கிரையாக்கப்பட்டு இந்து துறவி உட்பட அப்பாவி பொதுமக்கள் 11 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திட்டமிட்டு இந்துக்களை அழிப்பதற்கான ஒரு செயற்பாடாகும்.
இந்து மக்கள் ஏனைய மதஸ்தலங்களை அழிப்பதோ அல்லது அந்த மதத்தின் மீது பொய்யான பிரச்சாரங்களை செய்வதே இழிவுபடுத்துவதே ஏனைய மதத்தினரை மூளைச்சலவை செய்து மதமாற்றத்தில் ஈடுபடும் செயற்பாட்டில் ஈடுபடுபவர்கள் அல்ல.நானும் வாழ்ந்து இந்த உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பது இந்து மதத்தின் தர்மமாகும்.
இவ்வாறு பங்களாதேஷில் தொடர்ந்து இடம்பெறும் ஆயிரக்கணக்கான திட்டமிட்ட தாக்குதலில் பல ஆலயங்கள் சேதமடைந்ததுடன் பல பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
எனவே இந்த நவராத்திரி தினத்தில் இந்துக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட இந்த தாக்குதலுக்கு இந்து குருமார் பேரவை வன்மையான கண்டனங்களை தெரிவிக்கின்றது.
அதேவேளை, இந்த தாக்குதலை கண்டித்து இந்து ஆலயங்கள், இந்து அமைப்புக்கள், நிறுவனங்களின் கூட்டமைப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை 29 திகதி, ஏற்பாடு செய்துள்ள ஆத்மசாந்தி வேண்டி மற்றும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட இந்து குருமார் பேரவை பூரண ஆதரவு வழங்குவதாகவும்,அன்றைய தினம் மாவட்டத்திலுள்ள இந்து ஆலயங்களில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அகழ் விளக்கு ஏற்றி ஆத்மசாந்தி வேண்டி இந்து மக்கள் பிரார்த்திக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.