‘‘சுமந்திரன் அமெரிக்கா சென்றதும் இப்போது போராட்டம் நடத்துவதும் அரசை காப்பாற்றுவதற்கே’’
இன்று இலங்கையில் ஏற்பட்டிருப்பது பொருளாதார நெருக்கடியே (Economic recession) தவிர பொருளாதார மந்தமல்ல(economic depression ). அதுவும் இலங்கைக்குள் ஏற்பட்டு இருக்கிறதேயன்றி வெளிநாட்டு ரீதியானதல்ல.
எனவே இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார பிரச்சினை இலகுவாகச் சரி செய்யகூடிய ஒன்றே. அதிலும் குறிப்பாக வெளிநாடுகள் இலங்கைக்கு கடன் கொடுத்தால் இந்த பிரச்சினை இலகுவாக தீர்ந்துவிடும்.
இலங்கை கடன் வாங்கி பொருட்களைக் கொள்வனவு செய்து வர்த்தகம் செய்யும் நாடு. இது ஒரு கைத்தொழில் நாடல்ல. சேவைகளை அடிப்படையாகக் கொண்ட வர்த்தக பொருளாதார முறைமையை கொண்ட நாடாக உள்ளது. எனவே இங்கே கடன் வாங்குவதுதான் பிரச்சினையாக உள்ளது.
இலங்கை சர்வதேசத்திடமிருந்து கடனை பெற்றுக்கொண்டால் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி மறுகணமே இல்லாமல் போய்விடும். வெளிநாட்டு நாணயத்தை வைத்திருந்தால் அதாவது அந்நியச் செலாவணியை கையிருப்பில் வைத்திருந்தால் நெருக்கடி தீர்ந்துவிடும்.
இத்தகைய ஒரு காலப்பகுதியில் சுமந்திரன் அமெரிக்கா சென்றது தமிழர்களுக்கான அரசியல் தீர்வை ஆராய்வதற்கு என ஒரு பொய்யான பரப்புரையை தமிழரசுக் கட்சி செய்தது. அது உண்மையல்ல.
மாறாக இலங்கைக்கு ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடியில் இருந்து கோட்டாபய அரசை பாதுகாப்பதற்கே. எனவே தான் இவர்களின் பயணத்தின் போது இலங்கை பிரதமர் ராஜபக்ச சுமந்திரனை வழியனுப்பி வைத்தார்.
அமெரிக்கா சென்றவர்கள் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு, வழிகள் எவை, என்பதற்கான விடயங்களை ஆராய்ந்து விட்டுத்தான் திரும்பி வந்தவர்கள்.
திரும்பிவந்தவர்கள் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் ‘‘ஈழத் தமிழர்களுக்கான பிரச்சினைகளுக்கான தீர்வை அமெரிக்காவில் எடுக்க முடியாது என்றும் அதனை இந்தியாவுடன் பேசியே தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அது பிராந்திய நலன் சார்ந்தது என‘‘ அமெரிக்காவில் தெரிவித்தார்கள் என்றும் கூறினார்கள்.
இதன் மூலம் தமது பயணத்தின் இரகசியங்களை மறைத்துக் கொண்டார்கள். சுமந்திரனை ஒரு கையாளாகவும்,ஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை இன்னொரு கையாளாகவும் சிங்கள அரசு தனக்குச் சாதகமாக பயன்படுத்திவருகிறது.
கூட்டமைப்பினர் இந்தியாவிற்கு கடிதம் எழுதத் தொடங்க மறுபக்கம் 13ம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக கயேந்திரகுமார் தலைமையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
இங்கே இலங்கை அரசு 13ஆம் திருத்தத்தை ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்க அதற்கு ஆட்சேர்த்துக் கொடுப்பது போல, கோட்டபாயவிற்கு பலம் சேர்ப்பதற்காக கஜேந்திரகுமார் "'13ஆம் திருத்தச் சட்டம் வேண்டாம்"" என போராட்டம் நடத்தி இலங்கை அரசை பாதுகாப்பதற்கு துணை போயினர்.
இங்கே மொத்தத்தில் தமிழ் அரசியல் தலைமைகள் எனப்படுவோர் இலங்கை இனவாத அரசை பலப்படுத்தி ராஜபக்சாக்களின் ஆட்சியை உறுதிப்படுத்தவும் ஒற்றைக் காலில் நிற்கிறார்கள் என்பதுதான் உண்மையாகும். இதனை தொலுரித்துக் காட்டவேண்டியது தமிழ் ஊடகத்துறையின் இன்றைய கால தேவையாகும்.
முதலில் கூட்டமைப்பின் அரசியல் நகர்வுகளை பார்ப்போமேயானால் 2009-க்கு பின் அரசியல் களத்துக்கு வந்த கொழும்பு வாழ் அரசியல் தலைமைகள் வடக்கு-- கிழக்கு மக்களின் அரசியல் அபிலாசைகளை புறந்தள்ளி தமது சுயநல பொருளியல் சுகபோக வாழ்வு சிதைந்து போய்க் கிடக்கும் தமிழ் இனத்தை விற்றுப் பிழைக்க முற்படுகின்றனர்.
அந்த அடிப்படையிற்தான் திரு. சுமந்திரன் இலங்கை இனவாத அரசுடன் உள்ளக கூட்டுக்களை வைத்துக்கொண்டு வெளியே தமிழினத்தை காக்க வந்த தலைவர் போலவும் தமிழ் தேசியம் பேசுவதும், தான் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை கண்டுவிடுவேன் என்ற ஒரு மாயத்தோற்றத்தை தோற்றுவிப்பதையும் காணமுடிகிறது.
பொதுவாக தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுகின்ற போராட்டங்களுக்கு முன்வரிசையில் வந்து நிற்பது என்ற நாடகம் நிகழ்கிறது. உதாரணமாக P2P மற்றும் முல்லைத்தீவு நீராடி நீராவியடி பிள்ளையார் கோவில் போராட்டம், கன்னியா வெந்நீரூற்று உரிமத்திற்கான வழக்கு, காணி விடுவிப்பு போராட்டம் போன்றவற்றுக்கு வருகை தருவது.
அவ்வாறு அங்கு வந்து தீவிர தமிழ்த்தேசியம் பேசுவது பின்பு கொழும்பிலே ராஜபக்ஷ அவர்களுடன் கொஞ்சி குலாவி விருந்துண்பது என நடைமுறை நீழ்கிறது. அதுவே இவர்களுடைய அரசியல் சித்துவிளையாட்டு.
இதன் அடுத்த படியாக குருந்தூர்மலை விவகாரத்தில் அமைதியாக இருந்துவிட்டு இப்போது குருந்தூர்மலையில் புத்த விகாரம் ஒன்று கட்டப்பட்டு முடியும் தருணம் வரும்வரை அமைதியாக இருந்துவிட்டு இப்போது போராட்டம் நடத்துகிறார்கள்.
இவர்கள் போராட்டம் நடத்த முற்படுகின்ற வேளை வரைக்கும் யாரையும் செல்ல அனுமதிக்காமல் சிங்கள அரசு தடுத்து வைத்திருந்தது .
இவர்களுடைய போராட்டம் என்றவுடன் குருந்தூர்மலை பிரதேசத்துக்குச் செல்ல அரசு வழியை திறந்து விடப்பட்டிருக்கிறது. இதிலிருந்து இவர்கள் யார்? இவர்கள் பாலுக்கும் காவலன் பூனைக்கும் தோழனாக செயற்படுவதை உறுதிப்படுத்த முடியும்.
இங்கே சுமந்திரனுடைய பிரதான நோக்கம் இலங்கை அரசாங்கத்தை பாதுகாப்பதுதான். இதன் மூலம் சிங்களத்திடம் இருந்து தனது நலனை அடைவது. இங்கே சுமந்திரன் இரண்டு சிங்களத் தேசியக் கட்சிக்கும் நண்பனாக, நல்ல பிள்ளையாக வலம்வருகிறார்.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு இலங்கை அரசு சீனாவிடமிருந்து தொடர்ந்து கடன்களையும் உதவிகளையும் பெற்று சீனாவினுடைய பொருளியல் ஆதிக்கத்திற்குள் செல்வதை மேற்குலகம் விரும்பவில்லை.
எனவே மேற்குலகம் சார்ந்து இலங்கைக்காக நிதியைத் திரட்டுவதற்கு உருவாக்கப்பட்ட ஒரு முகவராகவே சுமந்திரன் காணப்படுகிறார்.
இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து பாதுகாப்பதற்காக அனைத்துக் கட்சிகளையும், புத்திஜீவிகளையும் ஒருங்கிணைத்து சமாதானப்படுத்தி ஒரு கட்டுக்குள் கொண்டுவந்து ஓரணியில் நின்றால் ஐ.எம்.எப் (IMF) மற்றும் உலக வங்கி போன்றவற்றிடமிருந்து நிதியை கோர முடியும்.
இத்தகைய வேலைகளுக்கு ஒரு சிங்கள கட்சி, சிங்கள அரசியல் பிரமுகர்கள் ஈடுபடுவதைவிட தமிழர் தரப்பிலிருந்து தொழிற்படுவதுதான் இலங்கை அரசுக்கு நன்மை பயக்க வல்லது.
அத்தோடு எந்த அரசியல் அதிகாரமுமற்ற அதேநேரத்தில் சிங்களத் தேசிய இனத்தினுடைய எதிர்த்தரப்பில் இருப்பதாகக் கருதப்படுகின்ற ஒருவர் இத்தகைய வேலையைச் செய்வதைத்தான் சிங்களதேசம் விரும்பும்.
அதுவே அவர்களுக்கு பல வழிகளிலும் நன்மை பயக்கவல்லதும் ஆகும். எனவேதான் சுமந்திரன் அந்த இடத்திற்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இவ்வாறு சர்வதேச நிதி நிறுவனங்களிடமும் மேற்குலக நாடுகளிடம் இருந்தும் இலங்கைக்கு நிதி உதவியை பெற்றுக் கொடுப்பதுதான் இவருடைய முழுமையான வேலைத்திட்டமாக தற்போது அரங்கேற்றப்பட்ட கொண்டிருக்கிறது.
இங்கே இலங்கையில் அனைத்து சிங்கள கட்சிகளும் ஒரு முடிவுக்கு வந்தால் ராஜபக்களும் உடன் படுவார்கள். இந்த உடன்பாட்டுக்குள் மேற்குலகத்தின் விருப்பமும், நிகழ்ச்சி நிரலும் முழுமையாக அடங்கிவிடும்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியும் தற்காலிகமாக தணிக்கப்பட்டுவிடும். அந்த வகையில் இலங்கை அரசுக்கும், சீன அரசுக்கும் ஒரு தற்காலிக ஓய்வு கிடைத்துவிடும்.
இந்த ஓய்வு கட்டாயம் இலங்கைக்கும், சீனாவுக்கும் தேவையாக உள்ளது. ஏனெனில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் ஆதிக்கப் போட்டியில் இலங்கையில் சீனா காலுான்றுவதால் ஏற்படுகின்ற கொதிநிலைக்கு இத்தகைய ஒரு ஓய்வுநிலை சீன- இலங்கை தரப்பிற்கு தேவையாக உள்ளது.
சிங்களப் பேரினவாதத்திற்கு உண்மையான விசுவாசியாகவும், நண்பர்களாகவும் இருக்கின்ற சுமந்திரன் கஜேந்திரகுமார், சாணக்கியன், சம்மந்தன் போன்றவர்கள் காலமெல்லாம் இனவாத அரசை காப்பாற்றிக் கொண்டு அவ்வப்போது தமிழ் மக்கள் தரப்பில் போராட்டங்கள் எல்லாவற்றுக்கும் முன்னே வந்து நின்று கொண்டு தமிழ் தேசியம் பேசி போர்க் குரல் எழுப்புகிறார்கள்.
இத்தகையவர்களுடைய பாசாங்கு அரசியலுக்கு சிங்கள அரசும் எந்த எதிர்ப்பும் காட்டாமல் ஆதரவு வழங்குகிறது. இங்கே ஒரு பக்கம் தமிழ் மக்களிடையே நடிப்பும், மறுபக்கம் சிங்கள தேசத்திற்கு நன்மை பயக்கவல்ல செயற்திறன் வாய்ந்த செயலையும் செய்கின்றனர்.
இவர்கள் சம்பந்தப்பட்ட தமிழர் சார்ந்த எல்லாவகையான போராட்டங்களிலும் இலங்கை அரச படைகள் எந்த இடையூறும் விளைவிக்கவில்லை மாறாக அனுசரணை வழங்குகிறது. வடக்கு மாகாண மீனவர் சார்ந்த பிரச்சினைகளுக்கு இவர்கள் . முன்நின்று செய்த போதும் அதற்கு அரசு ஆதரவளித்தது.
தமிழக மீனவர்களையும் ஈழத்தமிழ் மீனவர்களையும் மோதவிட்டு தமிழகத் தமிழர்களை பிரித்து ஈழத் தமிழர்களை தனிமைப்படுத்தி தமிழர் தாயகத்தில் சிங்களம் தனது நலனை அடைவதற்கு இவர்கள் துணை போகின்றனர்.
மேலும் கடிதங்கள் மகஜர்கள் அனுப்புவது, கையெழுத்து வேட்டை, ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் என இவர்கள் களத்தில் போராடுபவர்கள் போல தமிழ் மக்களின் இரட்சகர் போல காட்சி அளிக்கின்றனர்.
தமிழ் தேசியத்தை பாதுகாக்கப் போகிறோம் என்று கூக்குரலிடும் அவர்கள் உண்மையில் சிங்கள பேரினவாதத்தை பாதுகாப்பதில் தமது முழு காலத்தையும் நேரத்தையும் உழைப்பையும் செலவிடுகின்றனர்.
தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்திற்கு அனுப்பியது தமிழ் மக்களின் பிரச்சனை பற்றி பேசுவதற்கே அன்றி சிங்கள தேசத்தின் பொருளாதார நெருக்கடியை பேசுவதற்கு அல்ல.
இனவாத அரசுக்கு நெருக்கடி ஏற்படுவதுதான் தமிழர் பிரச்சினைக்கான தீர்வை நோக்கி பயணிப்பதற்கான வழியைத் திறந்துவிடும். அதுவே தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை பெற்றுத் தருவதற்கான வாய்ப்பாகவும் அமையும்.
இத்தகைய சந்தர்ப்பத்தில் தமிழர் தரப்பு மேன்மேலும் சிங்கள தேசத்திற்கு நெருக்கடியைக் கொடுக்க வேண்டுமே தவிர சிங்கள தேசத்துக்கு ஏற்படுகின்ற நெருக்கடியை தீர்த்துவைக்க தமிழர் தரப்பு முற்படக் கூடாது. அவ்வாறு முற்பட்டால் மேன்மேலும் சிங்களதேசம் தமிழர்கள் மீது சவாரி செய்யவே வழிவகுக்கும்.
எனவே இப்போது தமிழ் தலைவர்கள் இலங்கை அரசை பாதுகாப்பதற்கு முற்படுவது நாமே நம் தலையில் மண்ணை வாரி இறைப்பதற்கு சமமாகும்.
எனவே தற்போது இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை தீர்த்து வைப்பதற்கு அனைத்து சிங்கள கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சிக்கு சுமந்திரன் அவர்கள் தலைமை தாங்குவது என்பது ஒருபோதும் தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது.அவ்வாறு செய்வது வரலாற்றில் தமிழ் மக்களிடைய தேசிய அபிலாசைகளுக்கு இழைக்கப்படுகின்ற மிகப் பெரும் துரோகம் ஆகும்.

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
