முல்லைத்தீவில் சில பகுதிகளுக்கு திடீர் கட்டுப்பாடுகள்
நாளைய தினம் அனுஸ்டிக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை உணர்வுடன்,கட்டாய தனிமைப்படுத்தல் சட்டங்களை மதித்து சுகாதார விதிமுறைகளுடன் வீடுகளில் இருந்தவாறு அனுஸ்டிப்பது சிறந்தது என சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
கோவிட் வைரஸ் தொற்று என்பதன் காரணமாக பொலிஸாரால் விதிக்கப்பட்டுள்ள உத்தரவு கட்டாய தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைவானது .எனவே அனைவரும் இதனை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் மூன்று பிரதேசங்கள் இன்று இரவு 11 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கையின் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். இந்நிலையில்,முல்லைத்தீவு, புதுக்குயிருப்பு மற்றும் முள்ளிவாய்க்கால் காவல்துறை பிரதேசங்களே மறு அறிவித்தல் வரும் வரை தனிமைப்படுத்தப்படவுள்ளன.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தலை முள்ளிவாய்க்கால் மண்ணில் அனுஷ்டிப்பதை தடுப்பதற்காக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் தடை உத்தரவு கோரி தொடுக்கப்பட்ட வழக்கு இன்றையதினம் வாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதன் முடிவில் முள்ளிவாய்க்கால் மண்ணில் கோவிட் விதிமுறைகளைக் கடைப்பிடித்து அஞ்சலி நிகழ்வுகளை அனுஷ்டிக்க முடியுமென நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பீற்றர் இளஞ்செழியன் சார்பில் சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகமும், வட மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் ரவிகரன் சார்பில் சட்டதரணி தனஞ்சயன் தலைமையில் ஏனைய சட்டதரணிகளும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பிலும் சட்டதரணிகளான சுகாஸ், காண்டீபன் ஆகியோரும் மன்றில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.