திருகோணமலை வைத்தியசாலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி பற்றாக்குறை
திருகோணமலை வைத்தியசாலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி பற்றாக்குறை காணப்படுவதாகவும் மேலதிகமாக அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருகோணமலை வைத்தியசாலையில் மரணிக்கின்ற உடல்களை குறித்த நேரத்தில் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாகவும் மரண விசாரணை தொடர்பான ஆவணங்களை பெற்றுக்கொள்வதிலும் தாமதங்கள் ஏற்பட்டு வருவதாகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலதிக சிகிச்சை
திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு பல்வேறு இடங்களில் இருந்தும் சிகிச்சைகளுக்காகவும், மேலதிக சிகிச்சைகளுக்காகவும் நோயாளிகள் வருகை தருகின்றனர். இதனால் இங்கு பதிவாகின்ற மரணங்களின் வீதம் ஏனைய பிரதேசங்களைவிட அதிகமாக காணப்படுகின்றன.
அத்துடன் பிரேத பரிசோதனைகளை மேற்கொள்வதற்காகவும் ஏனைய பிரதேச வைத்தியசாலைகளில் இருந்தும் இறந்த உடல்கள் கொண்டு வரப்படுகின்றன.
திடீர் மரண விசாரணை
இந்நிலையில் ஏனைய பிரதேசங்களில் இரண்டுக்கு மேற்பட்ட திடீர் மரண விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் திருகோணமலைக்கு ஒரேயொரு திடீர் மரண விசாரணை அதிகாரி மாத்திரமே நியமிக்கப்பட்டிருக்கின்றார். அவரும் சுகவீனமடைந்த நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இறந்த உடல்களை பெற்றுக்கொள்வதிலும் அதற்கான ஆவணங்களை பெற்றுக்கொள்வதிலும் மக்கள் பல்வேறு விதமான அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ஒரு திடீர் மரண விசாரணை அதிகாரி போதுமானதாக இல்லை எனவும் மேலதிகமாக அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
