முக்கிய தேரர் தொடர்புடைய சிறுமியின் வழக்கு.. பெண் எம்பிக்களின் தலைமையில் அதிரடி நகர்வு
அனுராதபுரத்தில் சிறுமி ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர் மீதான வழக்கு தொடர்பில் அரசாங்கம் மீது கடுமயைான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான எதிர்கால சட்ட நடவடிக்கைகளை மேற்பார்வையிட மகளிர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவால் ஒரு துணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இன்று (25) நாடாளுமன்றத்தில் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தலைமையில் நடைபெற்ற மகளிர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பெண் எம்பிக்களின் துணைக்குழு
குறித்த துணைக்குழு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட நிறுவன மற்றும் சட்ட சீர்திருத்தங்களைப் பரிந்துரைக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த துணைக்குழுவிற்கு, பேரவையின் பிரதி இணைத் தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமன்மாலி குணசிங்க மற்றும் சட்டத்தரணி சமிந்திராணி கிரியெல்லா ஆகியோர் தலைமை வகிப்பார்கள்.
ஹேமாலி வீரசேகர, கௌசல்யா ஆரியரத்ன, சட்டத்தரணிகளான சாகரிகா அத்தாவுட, நிலந்தி கோட்டஹாச்சி, நிலுஷா லக்மாலி கமகே, துஷாரி ஜயசிங்க, அனுஷ்கா திலகரத்ன, ஹசர லியனகே, ஹிருனி விஜேசிங்க மற்றும் லக்மாலி ஆகியோரும் இந்த உபகுழுவிற்கு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய கூட்டம்..
பொதுமக்களின் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள அந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பாதுகாப்பு தொடர்பான தற்போதைய சட்ட நடவடிக்கைகள் மற்றும் விடயங்களை ஆராயவும் அந்தக் குழு முடிவு செய்துள்ளது.

அதன்படி, இலங்கை பொலிஸார், சட்டமா அதிபர் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் ஆகியவற்றின் பங்கேற்புடன், 2026ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் திகதிக்கு ஒரு சிறப்பு கலந்துரையாடல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விவாதத்தில், வழக்கின் முன்னேற்றம் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பதற்குப் பொறுப்பான சட்டங்களையும் நிறுவனங்களையும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூபாயின் மதிப்பிழப்பு அந்நிய முதலீடுகளுக்கு கூடுதல் வாய்ப்பு! முதலீட்டுச் சபை தலைவரின் கண்டுபிடிப்பு
you may like this