நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சை! ஆர்வத்துடன் பங்குபற்றிய மாணவர்கள் (Photos)
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று (22-01-2022) நாடளாவிய ரீதியில் இடம்பெற்றது. எவ்வித அச்சமும் இன்றி மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சைக்காக சுமார் 3 இலட்சத்து 55 ஆயிரத்து 326 மாணவர்கள் இன்றைய தினம் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவர்களில் தமிழ்மொழி மூலம் 85 ஆயிரத்து 445 பரீட்சாத்திகளும், சிங்களமொழி மூலம் 2 இலட்சத்து 55 ஆயிரத்து 62 பரீட்சாத்திகளும் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.
வவுனியா
வவுனியா மாவட்டத்திலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெற்றது.
இந்நிலையில் வவுனியா மாவட்டத்தில் 35 பரீட்சை மத்திய நிலையங்களில் 3051 மாணவர்கள் பரீட்சைக்கு தொற்றுகின்றதுடன் 16 பரீட்சை இணைப்பு மத்திய நிலையங்களும் அமைக்கப்பட்டிருந்தது.
கடந்த இரு தினங்களாக பரீட்சை மண்டபங்கள் தொற்று நீக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டது.
மேலும் பரீட்சைக்கு செல்லும் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன் கைச்சுத்தம் , உடல் வெப்பநிலை என்பன பார்வையிடப்பட்டிருந்தது.
செய்திகள் : திலீபன்
வடமராட்சி
வடமராட்சி கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளின் மாணவர்கள் தரம் ஐந்து புலமை பரீட்சைக்கு இன்றைய தினம் ஆர்வத்துடன் சமூகமளித்துள்ளமையை அவதானிக்க முடிகிறது.
பெற்றோர்களும் அக்கறையோடு தமது பிள்ளைகளை பரீட்சைக்காக வழியனுப்புவதையும் அவர்களை அழைத்துச் செல்வதற்கு காத்திருப்பதையும் அவதானிக்க முடிகிறது.
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் தரம் ஐந்து மாணவர்களுக்காகன 2021 புலமை பரிசில் பரீட்சை யாழ்ப்பாணத்திலும் மாணவர்கள் ஆர்வத்துடனும் பரீட்சை மண்டபங்களுக்கு சமூகமளித்து உள்ளனர்.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றியதாக நடைபெற்றுவருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து கல்வி வலயங்களிலும் இன்று காலை புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் இன்றைய தினம் சுகாதார வழிமுறைகள் கடுமையான முறையில் கடைப்பிடிக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் பாடசாலைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து கல்வி வலயங்களிலும் உள்ள 103பாடசாலைகளில் இன்றைய தினம் பரீட்சைகள் நடைபெறவுள்ள நிலையில் 13பாடசாலைகள் இணைப்பு நிலையங்களாக செயற்படுவதுடன் 10126மாணவர்கள் இன்று ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் தோற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகள் : குமார்
மன்னார்
தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை நாடு முழுவதும் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் மாணவர்கள் ஆர்வத்துடனும், நேரத்துடனும் பெற்றோருடன் பரீட்சை மண்டபங்களுக்கு சமூகமளித்து உள்ளனர்.
மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களில் தெரிவு செய்யப்பட்ட பரீட்சை நிலையங்களில் பரீட்சை இடம்பெற உள்ள நிலையில் மாணவர்கள் பெற்றோருடன் பரீட்சை நிலையங்களுக்கு சென்றுள்ளனர்.
பரீட்சை நிலையங்களுக்கு பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
செய்திகள் ஆஷிக்
முல்லைத்தீவு
நாடளாவிய ரீதியில் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பரீட்சைகள் பொலிஸ் பாதுகாப்புக்களுக்கு மத்தியில் சுகாதார நடை முறைகளை பேணி இடம்பெறுகிறது.
இந்நிலையில் மாணவர்கள் சுகாதார நடை முறைகளை பேணி ஆர்வத்துடன் பங்குகொண்டுள்ளமையை அவதானிக்ககூடியதாக உள்ளது.
மலையகம்
மலையகத்திலும் இன்று மாணவர்கள் மிக ஆர்வத்துடன் புலமைப் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.
கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் மற்றும் ஏனைய பாடசாலை மாணவர்கள் ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு சென்றமை காணக்கூடியதாக உள்ளது. மேலும் பரீட்சை நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
செய்திகள் திருமால்