தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் (Photos)
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னால் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நேற்று புதன்கிழமை (12.10.2023) கல்விசாரா ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.ரி.எம். தாஜுடீன் தலைமையில் ஒரு மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்திலும் சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞானபீடத்திலும் இடம்பெற்றுள்ளது.
பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்கங்கள், கல்விசார் ஆதரவு சங்கங்கள் மற்றும் அரசியல் சங்கங்களின் கூட்டுக்குழுவின் ஏகமனதான தீர்மானத்திற்மைவாக ஆறு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து குறித்த அடையாள பணிப்புறக்கணிப்பு நடைபெற்றுள்ளது.
பணிப்புறக்கணிப்புப் போராட்டம்
இவர்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்கள் தங்களது போராட்டத்தை முன்னெடுத்தனர்.
தேசிய பல்கலைக்கழக ஒழுங்கமைப்பை பாதுகாக்க,பல்கலைக்கழக ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க, வரவு/செலவுத் திட்டத்தில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் 40% சம்பள உயர்வை கிடைக்கச்செய்தல் , ஓய்வூதியம் மற்றும் வருங்கால வைப்பு நிதிக்கு விதிக்கப்பட்ட வரிகளை திரும்பப்பெறுதல், பல்கலைக்கழக பணியிடங்களில் காணப்படும் வெற்றிடங்களை உடனடியாக நிரப்புதல், அனைத்துப் பதவிகளுக்கும் ஒரே நேரத்தில் ஆட்சேர்ப்பு நடைமுறைகளை தயாரித்தல்.

1. கடந்த காலங்களில் முன்னெடுக்கட்ட பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் 107% சம்பள அதிகரிப்பு எங்களுக்கு வழங்குவதாக வாக்குறுதியளிக்கப்பட்டு 05 வருடங்கள் கடந்த நிலையில், இதுவரைக்கும் இந்த நிலுவை வழங்கப்படவில்லை. எனவே, மிகுதியாகவுள்ள 15% ஜ வழங்குமாறு அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுக்கின்றோம்.
2. பல்கலைக்கழக ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வினை வழங்குங்கள், அத்துடன் பல்கலைக்கழகங்களிலுள்ள ஆளணிப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, திறந்த ஆட்சேர்ப்பு முறையை நடைமுறைப்படுத்துதல்.
3. பல்கலைக்கழக ஊழியர்களுக்கு இல்லாமலாக்கப்பட்ட சம்பள அதிகரிப்பை உடனடியாக வழங்குங்கள்.
4. 2019ம் ஆண்டு ஏனைய அரசாங்க ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 2500.00 ரூபா சம்பள அதிகரிப்பு பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை.

5. தற்போதைய பொருளாதார நெருக்கடியால் சகல அத்தியாவசியப் பொருட்களுக்குமான விலைகள் வானளவு அதிகரித்துக் காணப்படுகின்றது. எனவே, 40% சம்பள அதிகரிப்பை உடனடியாக வழங்குங்கள் எனவும் அரசாங்கத்தை கோருகின்றோம்.
6. எங்களுடைய UPF, ETF மற்றும் Pension போன்ற பணங்கள் அத்தனையும் அரசாங்கத்தால் மீளவும் எடுக்கப்பட்டு பிறதொரு தேவைக்காகப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
இவ்வாறு எங்களுடைய பணங்களை மீளவும் எடுப்பதன் காரணமாக ஓய்வு பெற்றுச்செல்லும் எங்களுடைய ஊழியர்களுக்கு உடனடியாகப் அப்பணத்தை பெற்றுக்கொள்வதில் பாரிய சிக்கல்கள், சிரமங்கள் ஏற்படுகின்றன என அக்கோரிக்கையில் முன்வைக்க்ப்பட்டுள்ளது.