மட்டக்களப்பு மாவட்டத்தில் பயணத்தடையினை மீறுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றிலிருந்து சுகாதார திணைக்களத்தினை சேர்ந்த உத்தியோகத்தர்கள் மட்டுமே தமது அடையாள அட்டையினை காட்டி பயணிக்க முடியும் எனவும், ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்கள் அடையாள அட்டையுடன் திணைக்கள தலைவரின் அனுமதிக்கடிதமும் இருக்கும் போதே பயணிக்க முடியும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்தார்.
இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மட்டக்களப்பு மாவட்ட கோவிட் செயலணியின் கூட்டம் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மட்டக்களப்பு மாவட்ட கோவிட் செயலணிக்கு பொறுப்பான இராணுவ அதிகாரிகள்,பொலிஸ் உயரதிகாரிகள் திணைக்களங்களின் தலைவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட கோவிட் செயலணியின் கூட்டத்தில் விசேட தீர்மானங்கள் எடுக்கப்பட்டு ஊடகங்கள் ஊடாக மாவட்ட அரசாங்க அதிபரினால் அறிவிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையில்,இதனை கட்டுப்படுத்துவதற்கு சில இறுக்கமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.
இன்றிலிருந்து பயணத்தடையினை மீறுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்தாயிரம் ரூபா கொடுப்பனவு இதுவரையில் 89836
குடும்பங்களுக்கு 44கோடியே 90இலட்சத்து 80ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும்
மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.