நாம் இன்னும் சுதந்திரமான காற்றை சுவாசிக்க முடியாத கட்டத்தில் இருக்கிறோம் : சிறீதரன்
இந்த மண்ணிலே நாம் பல உயிர்களை தியாகம் செய்திருந்தும் சுதந்திரமான காற்றை சுவாசிக்க முடியாத கட்டத்தில் இருக்கிறோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் கடந்த 21ஆம் திகதி தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து மன்னார் மாவட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்களினால் நேற்று (24.01.2024) மாலை வரவேற்பு நிகழ்வு நடத்தப்டப்டது. .
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
தமிழர்களது வாழ்வு
"மனிதர்களுடைய வாழ்விலே பிறப்பிலிருந்து இறப்பு வரை எவ்வளவோ நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இவ்வாறே தமிழர்களுடைய வாழ்வும் பல அடையாளங்களோடும் எதிர்பார்ப்புகளோடும் கடந்து சென்று கொண்டிருக்கின்றது.இந்த நேரத்தில் மன்னார் மக்களுடன் நான் உரையாடுவது எனது வரலாற்றில் ஒரு பதிவாகின்றது.
என்னுடைய தெரிவுக்கு மன்னார் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கு நன்றியுடனும் அத்துடன் உங்களோடு நம்பிக்கையுடன் பயணிக்க இருக்கின்றேன்.
இந்த மண்ணிலே நாம் பல உயிர்களை தியாகம் செய்திருந்தும் சுதந்திரமான காற்றை சுவாசிக்க முடியாத கட்டத்தில் இருக்கிறோம். நாம் இன்னும் அந்நியப்படுத்தப்பட்டிருக்கின்றோம்.
தேசிய அடையாளம்
நாம் 75 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வரும் ஒரு இனமாக நாம் இருக்கின்றோம். 1949 ஆம் ஆண்டு தந்தை செல்வா தமிழர் ஒரு தேசிய இனம் என கூறினார். அவர் இழந்துபோன இறைமையை மீட்டு எடுத்து எமது தேசிய அடையாளத்தோடு வாழ வேண்டும் என செயல்பட ஆரம்பித்தார்.
எதிர்வரும் நான்கு ஆண்டுகளுக்குள் உலகம் முழுவதும் பாரிய மாற்றங்கள் இடம்பெற இருக்கின்றன. இன்று உலகத்தில் நிகழ்கின்ற சண்டைகள் அரசியல் நிகழ்வில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
மேலும், தமிழர்களின் தேசிய அபிலாசைகளை உலகம் புதிய பரிமாணத்துடன் சிந்திக்க முற்பட்டுள்ளது. நாம் இழந்த ஆன்மாக்கள் இப்பொழுது எமக்கு உத்வேகத்தை தருகிறது.
நாம் எந்த நோக்கத்திற்காக எமது உறவுகளின் உயிர்களை இழந்தோமோ அந்த நோக்கங்கள் இன்னும் அழிந்து போகவில்லை.
தமிழ் தேசியம்
சிங்கள மக்களுக்கு முன்பே நமது தமிழினம் இங்கு வாழ்ந்துள்ளது. நாம் இங்கு பல அடையாளங்களுடன் வாழ்ந்திருக்கிறோம்.
ஆகவேதான் இழந்த இறைமையை நாம் மீண்டும் பெற போராடுகின்றோம். எமது மொழி, இடம், கலை பண்பாட்டு எமது தமிழ் தேசிய அடையாளத்தை பற்றியுள்ளது.
நாம் பல சவால்களை சந்தித்து இன்னும் மனிதர்களாக இருக்கிறோம் என்றால் நாம் அறத்தின் மீதும் தர்மத்தின் மீது பற்றுக் கொண்டவர்களாக இருக்கின்றோம்.
இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு செய்தியை கூறுகின்றேன். தமிழர்களுக்கு வெளிச்சமான பாதை தொடங்கியுள்ளது. ஆகவே நாம் ஒருமித்த கரங்களாக இணைந்து கொள்வோம்.
தமிழர்களுக்கான பாதை
நமக்கு இந்த நாடு நிம்மதியான அமைதியை தருமா? என்ற கேள்வியை மீண்டும் கேட்டு நிற்கின்றோம். இலங்கை அரசு தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்காவிடில் இந்த நாடு பெரும் பாதாளத்துக்குள் விழும் என்பது ஐயம் இல்லை.
நாம் பெற்ற துன்பங்களை சிங்கள மக்கள் அனுபவிக்க தொடங்கி விட்டனர். இதனால் அரசு பயத்தில் மூழ்கியுள்ளது. இதுவும் தமிழர்களுக்கான பாதை திறக்க வழியாகும்.
ஆகவே நாம் எல்லோரும் இணைந்து ஒருமிக்க வேண்டிய காலகட்டம் இது” என இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam
