மீண்டும் இயற்கையின் கோரத்தாண்டவம்..! இதுவரையில் 6 பேர் பலி..
சப்ரகமுவ மாகாணம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை
நேற்று (03) பெய்த கனமழையால் பொல்பிட்டிய, மொரஹேனேகம பகுதியில் அமைந்திருந்த வீடு ஒன்றின் மீது மண்சரிவு ஏற்பட்டதில் மூன்று பெண்கள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று பெய்த கடும் மழையினால் அந்த வீட்டின் மீது மண்குன்று சரிந்து விழுந்ததாகவும், வீட்டுக்குள் இருந்த நால்வரும் அதில் சிக்கி உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், நாவலப்பிட்டி, சோலங்கந்த பகுதியில் அமைந்திருந்த கடையொன்றின் மீது திடீரென மண்சரிவு ஏற்பட்டதில் 67 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
6 பேர் பலி
இந்த விபத்துக்குப் பின்னர் நாவலப்பிட்டி – தொலஸ்பாகே (Dolosbage) வீதியின் 2ஆம் மைல் கல் அருகிலுள்ள பகுதி முழுமையாக போக்குவரத்துக்கு மூடப்பட்டது.

அதேவேளை, நேற்று மாலை வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஞானானந்தகம பகுதியில் மகாவலி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பாலத்தை கடந்து சென்ற 53 வயதுடைய நபர் ஆற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
மேலும், நேற்று மதியம் கினிகத்தேன பொலிஸ் பிரிவின் அம்பகமுவ பகுதியில் கனமழையால் நீரில் மூழ்கியிருந்த வீதியைக் கடக்க முயன்ற 45 வயதுடைய நபர் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.