தமிழர்களின் மொழியுரிமையை அடியோடு மறுக்கும் அரசு! எம்.ஏ.சுமந்திரன் குற்றச்சாட்டு
தமிழர்களின் மொழியுரிமையை அரசு அடியோடு மறுக்கின்றது. வெலிஓயா ஒருங்கிணைப்புக்குழுவின் கூட்டம் இதற்கு சரியான சான்று என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் குற்றம்சுமத்தியுள்ளார்.
'வெலிஓயா' எனப்படும் பிரதேச செயலாளர் பிரிவின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை 3 ஆம் திகதி வழமைக்கு மாறாக தனிச் சிங்களத்தில் இடம்பெற்றமை தொடர்பில் நேற்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
மொழி உரிமை முக்கியமானது
மொழி உரிமை முக்கியமானது. ஒவ்வொருவரும் தங்கள் மொழியில் பேசும் உரிமை இருக்கின்றது என ஜனாதிபதி திரும்பத் திரும்பக் கூறுகின்றார். ஆனால் நடைமுறையில் அப்படி இல்லை. இதற்கு மணலாறு (வெலிஓயா) உதாரணம் இவர்கள் சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாகவுள்ளது.
மணலாறு தற்போது வெலிஓயா எனப் பெயர் மாற்றி வைத்திருப்பது எல்லோருக்கும் தெரியும். இந்தக் கூட்டத்துக்கு வவுனியா வடக்கு பிரதேச சபை மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச சபை என்பவற்றின் தவிசாளர்கள் கலந்துகொள்வது வழமையானது.

இக் கூட்டத்துக்கு வவுனியா வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் கிருஷ்ணவேணி வழமையாகவே சமுகமளிப்பவர். இக்கூட்டத்தில் பங்குகொள்பவர்களில் அதிகமானோர் தமிழ் மக்கள் உத்தியோகத்தர்களும் அவ்வாறுதான் உள்ளனர்.
இக் கூட்டமானது இதுவரை காலமும் மொழிபெயர்ப்புடனேயே இடம்பெறுவது வழமை. இக் கூட்டம் இடம்பெற்றதற்கு முதல் நாள் கிவுல் ஓயாத் திட்டத்துக்கு எதிராக நாம் ஓர் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டமை அனைவருக்கும் தெரியும்.
மொழிபெயர்ப்பு
அடுத்த நாள் இந்தக் கூட்டம் இடம்பெறுகின்றபோது வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளருக்கு வழமையாக ஆசனம் ஒதுக்கும் இடத்தில் இருக்கை ஒதுக்கப்படவில்லை.
வழமைக்கு மாறாக மாற்ற முடியாது எனத் தெரிவித்த தவிசாளர் மேடையிலேயே அமர்ந்தார், அதன் பின்பு கூட்டமானது முழுமையாகத் தனிச் சிங்களத்தில் மட்டுமே இடம்பெற்றது மொழிபெயர்ப்பு கேட்டபோதும் கொடுக்கப்படவில்லை ஆகையினால் தவிசாளர் கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.
சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் ஜனாதிபதி, நாடாளுமன்றத்தில் சபை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் 'நாம் இனவாதிகள் அல்லர். நாங்கள் இனவாதச் செயல்பாட்டில் ஈடுபடுவது கிடையாது, நீங்கள் நடத்திய போராட்டம் இனவாதமான போராட்டம்' என்று கூறியுள்ளனர்.

மொழி உரிமை
இந்தப் பின்னணியில் வவுனியா வடக்கு தவிசாளரையும் அங்குள்ள மக்களையும் புறக்கணித்து, மொழிபெயர்ப்பு இல்லாமல் தனிச் சிங்களத்தில் கூட்டம் நடத்தியமை.
இதை இனவாதம் என்பதா அல்லது வேறு எவ்வாறு கூறுவது? தேர்தல் காலத்தில் யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி மொழி உரிமை முக்கியமானது, முக்கியமானது, ஒவ்வொருவரும் தங்கள் மொழியில் பேசும் உரிமை இருக்கின்றது எனத் திரும்பத் திரும்பக் கூறினார். ஆனால் நடைமுறையில் எப்படி உள்ளது? அதனால் நாம் இது தேசிய மட்டத்தில் - நாட்டில் உள்ள மக்களுக்கும் தெரியவேண்டும் என்பதற்காக இதனை வெளிப்படுத்துகின்றோம்.
இவர்கள் சொல்வது ஒன்று செய்வது ஒன்றாகவுள்ளது மிக முக்கியமானது மொழி உரிமை எனச் சொல்லிக்கொண்டு அந்த மொழி உரிமை மறுக்கப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஊடக சந்திப்பில் வன்னி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான து.ரவிகரன், மருத்துவர் ப.சத்தியலிங்கம் உட்பட தமிழரசின் எம்.பிக்களான குகதாசன், கோடீஸ்வரன், சாணக்கியன், மருத்துவர் சிறிநாத், சிறிநேசன் ஆகியோரும், வவுனியா வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் கிருஷ்ணவேணியும் கலந்துகொண்டனர்.
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 3 நாட்கள் முன்
சொத்து விஷயத்தில் குணசேகரன் அதிரடி, ஜனனியின் நிலை...எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam