கெளரவமான அரசியல் தீர்வுக்கோரி மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் (Video)
வடக்கு - கிழக்கில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த குரலாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என முசலி பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
'கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்' எனும் தொனிப்பொருளில் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் நூறு (100) நாட்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள செயல் திட்டத்தின் 33 வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் வடக்கு,கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஒழுங்கமைப்பில் அதன் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் இன்று முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சிலாபத்துறை பேருந்து தரிப்பிடத்தில் இடம்பெற்றது.
13 ஆம் திருத்த சட்டம் தொடர்பாக தெளிவுபடுத்தல்
குறித்த நிகழ்வில் சட்டத்தரணி எஸ்.டினேசன், கிராம மட்ட அமைப்புகள் ,விவசாய, மீனவ சங்கங்கள்,பெண்கள் அமைப்புகள் ,சிவில் சமூக அமைப்புகள் மனித உரிமை ஆர்வலர்கள்,மன்னார் மெசிடோ மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் பணியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
குறித்த செயற்திட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்களால் 100 நாள் செயற்திட்டத்திற்கான பொது மகஜர் வாசிக்கப்பட்டதுடன் வருகை தந்த பொது மக்களுக்கு அரசியல் தீர்வு திட்டம் மற்றும் 13 ஆம் திருத்த சட்டம் தொடர்பான சாதக,பாதக விளைவுகள் தொடர்பாக சட்டத்தரணி எஸ்.டினேசன் தெளிவுபடுத்தல் வழங்கியுள்ளார்.
அதே நேரம் அரசியல் தீர்வு விடயத்தில் மக்களின் கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான கருத்துக்களும் உள்வாங்கப்பட்டது.












