மீனவர்களுக்கான எரிபொருள் விநியோகத்தில் மோசடி! திருகோணமலை மாவட்ட பிரஜைகள் குழு கண்டனம்
பொதுமக்கள் மற்றும் மீனவர்களுக்கு எரிபொருள் விநியோகத்தில் இடம்பெறும் மோசடிகள் மற்றும் ஊழல்களை உடனடியாக நிறுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நாட்டில் கடந்த 9ஆம் திகதி ஏற்பட்ட மக்கள் கிளர்ச்சி போன்று பல மடங்கு கிளர்ச்சிகள் எதிர்காலத்தில் ஏற்படக்கூடும் என திருகோணமலை மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் தயானந்த ஜயவீர தெரிவித்தார்.
திருகோணமலை ஊடக இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டில் ஒரு வேளை உணவு சமைப்பதற்காக கொட்டும் மழையிலும் வெயிலிலும் நீண்ட வரிசைகளில் வீட்டில் உள்ள அனைவரும் எரிபொருள் கொள்வதற்காக நாள் கணக்கில் காத்திருந்து எரிபொருளை கொள்வனவு செய்வது நாட்டிற்கு ஏற்பட்டுள்ள சாபக்கேடு. அதன் பிரதிபலனாக கடந்த 9 ஆம் திகதி ஏற்பட்ட கலவரத்தை போன்றோரு இன்னுமொரு கலவரத்திற்கு அரசாங்கம் முகம் கொடுக்க நேரிடும்.
எரிபொருளை முறையாக விநியோகிப்பதில் சிக்கல்
மேலும் திருகோணமலை கொட்பே மீன்படி துறைமுகத்திற்கு வரும் எரிபொருளை முறையாக விநியோகிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.
அவ்வாறு விநியோகிக்கப்படும் எரிபொருளில் மோசடிகள் இடம்பெறுவதாகவும்,மீன்பிடி துறைமுகத்திற்கு வழங்கப்படுகின்ற எரிபொருள் தொடர்பில் மீன்பிடி சங்கங்கள் என்ற வகையில் எந்த ஒரு தகவல்களும் தமக்கு வழங்கப்படுவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
குறித்த எரிபொருள் நிலையத்திற்கு வழங்கப்படுகின்ற எரிபொருள் எங்கு எவ்வாறு செல்கின்றது என்பது தொடர்பில் அரசு ஆராய வேண்டும் எனவும்,அகில இலங்கை கடற்றொழில் சங்கங்களின் சம்மேளனத்தின் திருகோணமலை மாவட்ட தலைவர் பியல் ஹேமசிறி தெரிவித்தார்.
மேலும் 650 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் திருக்கடளூர் பிரதேசத்தில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு காரணமாக நாளொன்றுக்கு ஓரிரு படகுகள் மாத்திரமே கடலுக்கு செல்வதாகவும், சில பிரதேசங்களில் டோக்கன் அடிப்படையில் மண்ணெண்ணெய் வழங்கப்படுவதாகவும்,அவ்வாறு வழங்கப்படுகின்ற மண்ணெண்ணெய் வெறுமனே 30 லிட்டர் மாத்திரமே வழங்கப்படுவதாகவும், இவ்வாறு வழங்கப்படும் மண்ணெண்ணெய் குறிப்பிட்ட தூரம் மாத்திரம் பயணித்து மீன்பிடி தொழிலிலைமுன்னெடுத்துச் செல்வதாகவும், இதனால் மீனவ குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதற்கு பெரிதும் சிரமப்பட்டு வருவதாக திருக்கடளூர் மீனவர் சங்கத் தலைவர் வி.தர்மபாலன் தெரிவித்தார்.
மேலும் தமது அன்றாட தொழிலினை முன்னெடுத்துச் செல்வதற்கான எரிபொருளை உரிய
அதிகாரிகள் வழங்குவதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், திருகோணமலை
மாவட்டத்தின் மீன்பிடி தொழிலை வழமைபோன்று முன்னெடுத்து செல்வதற்கு அரசு
நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதன்போது கேட்டுக்கொண்டார்.