இலங்கை போக்குவரத்து சபையின் புத்தளம் மாவட்ட ஊழியர்கள் போராட்டம்
இலங்கை போக்குவரத்து சபையின் புத்தளம் மாவட்ட ஊழியர்கள் பெட்ரோலைப் பெற்றுத்தருமாறு கோரி இன்று காலை முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கைப் போக்குவரத்து சபையின் புத்தளம் மாவட்டத்தில் சுமார் 300 ஊழியர்கள், 200 பேருந்து சாரதிகள் மற்றும் பேருந்து நடத்துனர்கள் பணிபுரிவதாகவும் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்ட ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
வைத்தியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களை ஏற்றிச்செல்லும் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் பேருந்து சாரதிகளான தமக்கு வாரத்தில் ஒருமுறை 5 லீற்றர் பெட்ரோலை பெற்றுத்தருமாறு கோரி வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர் வேலை நிறுத்த போராட்டம்
பல கிலா மீட்டருக்கு அப்பாலிருந்து தாம் வேலைக்கு சமூகமளிப்பதாகவும், இதன்போது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் இல்லாமையின் காரணமாக நான்கு நாட்களுக்கு வேலைக்கு சமூகமளிக்க முடியாமல் கற்பிட்டியிலிருந்து சுமார் 40 கிலோமீற்றர் தூரத்திலிருந்து துவிச்சக்கர வண்டியில் இன்று வேலைக்கு சமூகமளித்ததாகவும் ஊழியரொருவர் கவலை தெரிவித்துள்ளார்.
இன்று தமக்கான எரிபொருளைப் பெற்றுத்தராவிட்டால் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுப்பதாக இலங்கைப் போக்குவரத்து சபையின் புத்தளம் மாவட்ட ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.