இறுதிக்கட்டத்தில் வவுனியா பாடசாலை ஊழல் விவகார விசாரணைகள்: வெளியான பல முக்கிய தகவல்கள்
வவுனியாவின் பிரபல பாடசாலை ஒன்றில் 2016-2020 வரையான காலப்பகுதியில் அதிபராக இருந்த நபரினால் பல மில்லியன் அரசபொது நிதி ஊழல் இடம்பெற்றமை தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகிறது.
தற்போது விசாரணைகள் இறுதிக்கட்டத்தை அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறநிலையில், குறித்த முறைகேடுகளுடன் அப்போதைய வலய கல்வி பணிப்பாளராக இருந்த ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இறுதிக்கட்ட விசாரணை
மத்திய கணக்காய்வுத் திணைக்கள அதிகாரிகள் குறித்த விடயம் தொடர்பாக குறித்த பாடசாலை மற்றும் அதனுடன் தொடர்புடைய மாகாண தேசிய நிறுவனங்களிடம் இறுதிக்கட்ட விசாரணைப்பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2019ம் ஆண்டில் குறித்த பாடசாலையின் அதிபருக்கு எதிராக தேசிய கணக்காய்வுத் திணைக்களத்தின் 10 விசாரணைகளில் பல மில்லியன் அரச பொது நிதி குறித்த அதிபரால் ஊழலுக்கு உள்ளாமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
பணிப்பாளர் ஊழலுக்கு உடந்தை
ஆனாலும் குறித்த அதிபரைப் பாதுகாப்பதில் அப்போதைய வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் தீவிர அக்கறை காட்டியதாக பாடசாலை சமூகம் குற்றச்சாட்டை முன்வைத்தது. காரணம் பாடசாலையின் ஊழலில் குறித்த வலயக்கல்விப் பணிப்பாளரும் பங்கெடுத்திருந்தமை வெளிச்சாத்துக்கு வந்தது.
குறித்த பாடசாலையின் மாணவர்களுக்கான சத்துணவு விநியோகத்தில் வலயக்கல்விப் பணிப்பாளரின் அனுமதியுடனேயே பல மில்லியன் அரச பொது நிதி ஊழலுக்கும் உள்ளானமை கணக்காய்வுத் திணைக்களத்தின் 51ம் இலக்க கணக்காய்வு விசாரணையின் மூலம் உறுதி செய்யப்பட்டது.
மேற்படி கணக்காய்வு விசாரணையின்படி அண்ணளவாக 100 மில்லியனுக்கு மேற்பட்ட நிதி குறித்த வலயக் கல்விப் பணிப்பாளரின் அனுமதியுடன் அதிபரால் குறித்த ஒரு தனி நபரின் பெயருக்கு எழுதப்பட்டு மேற்படி நபர்களால் கையாடல் செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டது.
ஒருகோடிக்கு மேற்பட்ட நிதி
அதுமட்டுமன்றி 61ம் இலக்க கணக்காய்வு விசாரணை அறிக்கையின்படி செலவினங்கள் தொடர்பாக எந்தவித ஆதாரங்களுமின்றி அண்ணளவாக ஒருகோடிக்கு மேற்பட்ட நிதி குறித்த அதிபரால் ஊழலுக்கு உள்ளாகியுள்ளமை அம்பலத்துக்கு வந்துள்ளது.
அத்துடன் பாடசாலைக்கு மதில் அமைக்கும் பெயரில் நடைபெற்ற முறைகேடு, விடுதி புனரமைப்பின் பெயரில் நடைபெற்ற பல மில்லியன் ஊழல் உறுதிப் படுத்தப்படாத செலவினம் அண்ணளவாக ஒரு கோடிக்கு மேல் என அறியப்படுகிறது.
இந் நிலையில் கணக்காய்வு விசாரனைகள் இறுதிக்கட்டத்தை அண்மித்த நிலையில் ஊழல்கள் தொடர்பாக அப்போதைய வலயக்கல்விப் பணிப்பாளர் எந்தவிதஆரம்பக்கட்ட விசாரணைகளையும் மேற்கொள்ளவில்லை. அது மட்டுமல்லாது வவுனியா வலயத்தின் ஒரு அறையின் திறப்பு இதுவரை இவரால் கையளிக்கப்படவில்லை என குற்றச்சாட்டுக்கள் உள்ளது.
பக்க சார்பில்லாத விசாரணை
ஆகவே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் மீது பக்க சார்பில்லாத விசாரணை மேற்கொள்ளப்படுவதோடு விரைவில் விசாரணை அறிக்கை வெளியீட்டு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் குறித்த பாடசாலை அதிபரை தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து சொல்வதற்கான அதிகாரம் தனக்கு இல்லை எனவும் மேல் அதிகாரிகளிடம் குறித்த விடயம் தொடர்பில் கேட்டறியுமாறு தெரிவித்துள்ளார்.



