நாட்டின் பல்வேறு பகுதிகளில் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 8 பேர் கைது
பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் இன்று தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக மதுபானசாலை சுற்றிவளைப்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 506 லீற்றர் மதுபானம் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன் 2850 லீற்றர் கோடா, 4 எரிவாயு அடுப்புக்கள், 4 எரிவாயு சிலிண்டர்கள், 4 செப்புத் தகடுகள் என்பவற்றையும் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கொழும்பு, வெல்லம்ப்பிட்டி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஒரு கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் அப்பிரதேசத்தை சேர்ந்த 27 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலன்னறுவை, வெலிக்கந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வடமுனை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் டிப்பர் ரக வாகனத்தில் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 32 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை மொனராகலை, சியம்பலாண்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொல்கஹகம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அனுமதிப் பத்திரமின்றி டிப்பர் ரக வாகனத்தில் மணல் ஏற்றிய 26 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாந்தோட்டை, கொலொன்ன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பளுகஹேன பிரதேசத்தில்
மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், சுரங்கம் தோண்டும் பணியில்
ஈடுபட்டுக்கொண்டிருந்த நால்வரை இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் பொலிஸ் விசேட
அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.
