வெளிநாட்டில் இலங்கை பெண்ணுக்கு மரண தண்டனையா?
குவைத்தில் வாழும் இலங்கையர் தொடர்பில் சமூக வலைத்தளம் ஊடாக வெளியாகிய தகவல் போலியானதென வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கிறிஷ்னன் சிறியானி சந்திரலத்தா என்ற பெண்ணுக்கு குவைத் நாட்டில் மரண தண்டனை விதிக்க ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் குவைத் தூதரகம் கடந்த 21ஆம் திகதி குவைத் அதிகாரிகளிடம் முறைப்பாடு ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
அதற்கமைய குவைத் பொலிஸாரின் ஆதரவுடன் தூதரக அதிகாரிகளினால் குறித்த பெண் பணியிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டார். கடந்த 22ஆம் திகதி அந்த பெண் தூதரகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
தொழில் வழங்குனர்களினால் குறித்த பெண்ணின் இலங்கை பயணத்தை தாமதப்படுத்துவதனால் மீண்டும் இலங்கை வர வேண்டும் என்ற நோக்கில் குறித்த பெண் தனது பிள்ளைகளுக்கு பிழையான தகவல்களை வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளதென வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த பெண் மீண்டும் இலங்கைக்கு வருவதற்காக குவைத் தூதரகத்தினால் உதவிகள் செய்யப்படுவதாக வெளிவிகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.