365 நாளும் பெண்களுக்கான தேசமாக இலங்கை மாறும்! சஜித் இலட்சியப் பிரகடனம்
பெண்களின் உரிமைகளை வருடத்தில் ஒரு நாள் மட்டும் கொண்டாடுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், ஆண்டின் 365 நாள்களும் அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் நாடாக இலங்கையை மாற்றியமைப்போம்" என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மகளிர் சக்தியும் இணைந்து ‘தேசத்தைக் கட்டியெழுப்பும் அவளைப் பாதுகாப்போம்’ எனும் கருப்பொருளில் நேற்று(8.3.2026) ஏற்பாடு செய்திருந்த சர்வதேச மகளிர் தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
புதிய புலமைப்பரிசில் திட்டம்
அங்கு அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு, பல்கலைக்கழகக் கல்வியைத் தொடரும் மாணவிகளுக்காக ‘ஜன நள லிய’ திட்டத்தின் கீழ் புதிய புலமைப்பரிசில் திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படுகிறது.
அத்துடன், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் நாட்டின் 14,008 கிராம அலுவலர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான தேசிய செயற்திட்டம் முன்னெடுக்கப்படும்.
பொருளாதார நெருக்கடியும் தாய்மார்களும்
* நாட்டின் தற்போதைய வறுமை மற்றும் மத்திய கிழக்கு போர்ச் சூழலால் ஏற்படும் பொருளாதாரப் பாதிப்புகளால் வீட்டின் தெய்வமான தாய்மார்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
குடும்ப வருமானம் குறையும் போது, பிள்ளைகளை வளர்ப்பதிலும் குடும்பத்தை நிர்வகிப்பதிலும் ஆண்கள் எதிர்கொள்வதை விட அதிக பொறுப்புகளையும் சவால்களையும் பெண்களே சுமக்க வேண்டியுள்ளது.
டிஜிட்டல் கல்வியறிவும் ‘பிரபஞ்சம்’ திட்டமும்
பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு, ‘பிரபஞ்சம்’ (சக்வல) திட்டத்தின் ஊடாக டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்ற நவீன கல்வியறிவை அவர்களுக்குப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வெறும் வதந்திகளுக்கும் ஆர்ப்பாட்ட நாடகங்களுக்கும் இடமளிக்காமல், யதார்த்தமான தீர்வுகளின் மூலம் பெண்களைச் சக்திப்படுத்துவதே எமது இலக்காகும்.
நுண்கடன் பாதிப்புக்கு இலவச சட்ட உதவி
நுண்கடன் வலையில் சிக்கித் தவிக்கும் பெண்களுக்குத் தேவையான சட்டப் பாதுகாப்பை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி முன்வந்துள்ளது.
இதற்காக இலவச சட்ட உதவித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு, கடன் சுமையால் நசுக்கப்பட்டுள்ள பெண்களின் உரிமைகளுக்காகச் சட்ட ரீதியாகக் குரல் கொடுக்கப்படும்.
மாதவிடாய் வறுமை ஒழிப்பு
கடந்த காலங்களில் நாம் ‘மாதவிடாய் வறுமை’ குறித்துப் பேசியபோது எள்ளி நகையாடியவர்கள், இன்று அதன் பாரதூரத்தை உணர்ந்து தேசிய கொள்கையின் அவசியத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
பாடசாலைகளை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட இந்த விழிப்புணர்வுத் திட்டத்தை, நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் இலவசமாகச் சென்றடையச் செய்யும் தேசிய வேலைத்திட்டமாக நாம் மாற்றுவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்தார்.