மலையக இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு: ஜீவன் தொண்டமான் (Photos)
நாட்டில் கூடிய விரைவில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக அந்தந்த தோட்டப்பகுதியில் உள்ள இளைஞர், யுவதிகளுக்கு போட்டியிட வாய்ப்பளிக்க போவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
ஜீவன் தொண்டமான் தலைமையில் மஸ்கெலியா சாமிமலை மாக்கலை தோட்டத்தில் கரப்பந்தாட்ட விளையாட்டு மைதானம் ஒன்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
ஜீவன் தொண்டமானின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இந்த மைதானம் புனரமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் விரைவில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெறும் என தெரியவந்துள்ளது. அந்த தேர்தலில் பிரதேச மக்களை உள்ளடக்கிய தோட்டப்பகுதி இளைஞர், யுவதிகளை போட்டியிட செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியாமை
மக்கள் பாரியளவில் வாக்குகளை அளித்து எங்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்து அமைச்சு பதவிகளை பெற்றுக் கொண்டிருந்தாலும் கூட அரசாங்கத்தில் மக்கள் எதிர்பார்த்த அபிவிருத்திகளை முன்னெடுக்க முடியாது பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டது.
இருந்தாலும், மக்களுக்கு சேவை செய்ய முடியாத அந்த அரசாங்கத்தில் இருந்து நாங்கள் விலகி விட்டோம். எதிர்காலத்தில் நாடு நல்ல ஒரு முன்னேற்றம் அடையும். அதன்போது மக்கள் எதிர்பார்க்கும் அபிவிருத்திகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஊடாக செய்வதற்கான வாய்ப்புகள் கிட்டும்” என தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி தலைவரும், கொட்டகலை
பிரதேச சபையின் தலைவருமான ராஜமணி பிரசாந்த், மஸ்கெலியா பிரதேச சபையின் தலைவர்
செண்பகவள்ளி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணியின் பொது
செயலாளர் அர்ஜுன் ஜெயராஜ், இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் பல
முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.














ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 48 நிமிடங்கள் முன்

புதிய டிராவல்ஸ் தொடங்கிய கதிர், யாருடைய பெயர் வைத்துள்ளார் தெரியுமா?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
