நாட்டை உலுக்கிய பயங்கர வன்முறை.. துபாயில் தீட்டப்பட்ட திட்டம் - வெளிவரும் அதிர்ச்சியூட்டும் பின்னணி
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை மோதலானது ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல, மாறாக அது நீண்ட நாட்களாகத் திட்டமிடப்பட்ட ஒரு சதித்திட்டத்தின் விளைவு என்பதை நிரூபிக்கும் பல ஆதாரங்கள் தற்போது வெளியாகி வருவதாக குறிப்பிட்டு தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறைச்சாலைக்குள் இயங்கும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் வெளிநாட்டு பாதாள உலகக் குழுக்களினால் இந்த கொடூரமான கலவரம் நேரடியாக வழிநடத்தப்பட்டுள்ளது என்பதும், இதன் காரணமாக ஏழு சிறைச்சாலை அதிகாரிகளும் இருபத்தொரு கைதிகளும் உயிரிழந்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற.
இந்த முழுமையான சம்பவத்திற்கு பின்னால் முன்கூட்டியே திட்டமிடல் இருந்தது என்ற சந்தேகத்தை, கலவரக்காரர்கள் சிறைச்சாலையின் பாதுகாப்பு அமைப்புகளை இலக்கு வைத்தமை எழுப்புகின்றது.
அழிக்கப்பட்ட ஆதாரங்கள்..
குறிப்பாக, தடைசெய்யப்பட்ட பொருட்கள் உள்ளே நுழைவதைத் தடுப்பதற்காக பொருத்தப்பட்டிருந்த நவீன உடல் ஸ்கேனர்களை (body scanners) கைதிகள் திட்டமிட்டு சேதப்படுத்தி, பாதுகாப்பு தடைகளை அகற்ற முயன்றுள்ளனர்.

அத்துடன், தங்களது குற்றங்களுக்கான எந்தவொரு ஆதாரமும் எஞ்சியிருக்கக் கூடாது என, சிறைச்சாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) கேமரா அமைப்பைக் கழற்றி, அதன் காணொளி பதிவு சாதனங்களை (DVR) முற்றாக அழிப்பதற்கும் அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த தொழில்நுட்ப சாதனங்களின் அழிப்பு எந்த வகையிலும் தற்செயலானது அல்ல என்றே விசாரணை அதிகாரிகளும் கருதுகின்றனர்.
இந்நிலையில், துபாயில் பதுங்கியிருக்கும் டூம் மற்றும் அடா என்ற பெயர்களுடைய பாதாள உலக கும்பல் தலைவர்களாலேயே இந்த பாரிய அளவிலான மோதல் திட்டமிடப்பட்டிருக்கலாம் என உளவுத்துறை அமைப்புகள் சந்தேகிக்கின்றன.
சிறையில் இருந்துகொண்டே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த கட்டுவெல்லகொட சுரேஷ் என்ற கைதி, இந்த தாக்குதலின் முக்கிய திட்டமிடுபவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
துபாயில் திட்டம்..
இவர் தற்போது வெளிநாட்டில் இருக்கும் பாதாள உலகத் தலைவரான புரூ முனாவின் (Buru Muna) நெருங்கிய கூட்டாளி ஆவார். அத்துடன், இதற்கு முன்னர் விமான நிலையத்தில் வைத்து அவரை மீட்பதற்கு முயன்ற சம்பவத்திலும் இவர் தொடர்புபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறைச்சாலைக்குள் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த போதைப்பொருள் கடத்தல் குறித்து, மாற்றுக்குழுக்களின் ஆதரவைப் பெற்ற சில கைதிகள் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளதாகவும், அந்தத் தகவல் வழங்குநர்களைப் பழிவாங்குவதற்காகவே இக்கும்பல் நீண்ட நாட்களாக இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டு வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
தாக்குதலின் போது கைதிகள் மறைத்து வைத்திருந்த இரும்புக்கம்பிகள், கற்கள் போன்ற கொடிய ஆயுதங்களை ஒரே நேரத்தில் பயன்படுத்தியதில் இருந்தும் இந்த முன்திட்டமிடல் தெளிவாகப் புலனாகிறது.
மோதலின் ஆரம்பத்திலேயே உயிரிழந்த இரண்டு கைதிகளும் அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கிய ஒற்றர்கள் என்பதும், இந்தத் தாக்குதல் குறிப்பாக அவர்களை இலக்கு வைத்தே நடத்தப்பட்டது என்பதும் தற்செயலானது அல்ல.
எவ்வாறாயினும், சிறைக்குள் இரகசியமாகத் தகவல் வழங்கியவர்கள் யார் என்பதை கடத்தல்காரர்கள் எவ்வாறு தெரிந்துகொண்டார்கள் என்பது சிறைச்சாலை அமைப்பின் நேர்மை மற்றும் இரகசியத்தன்மை குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது.
சிறைபிடிக்கப்பட்ட அதிகாரிகள்..
மேலும், அதிகாரிகள் எவ்வாறு கைதிகளால் திட்டமிட்டு பொறிக்குள் சிக்க வைக்கப்பட்டனர் என்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஜூலை 5ஆம் திகதி ஏற்பட்ட ஆரம்பக்கட்ட மோதல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பின்னர், அதற்கு அடுத்த நாள், சுமார் ஐம்பது கைதிகள் தங்களது உறவினர்களைச் சந்திக்கவும் உணவைப் பெற்றுக்கொள்ளவும் விரும்புவதாக சிறைச்சாலை அத்தியட்சகர் கஜநாயக்கவிடம் மனிதாபிமான கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்ட போது, அவர்களை அழைத்து வருவதற்காக உள்ளே சென்ற பத்து சிறைச்சாலை அதிகாரிகள், திடீரென கலவரத்தில் ஈடுபட்ட கைதிகளால் சூழப்பட்டு கொடூரமாகத் தாக்கப்பட்டு பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளனர்.
இந்த உத்தி முற்றிலும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்றாகும். பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக சிறைச்சாலை அதிகாரிகளும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் உள்ளே நுழைய முயன்றபோது, கைதிகள் டி-56 (T-56) ரக தானியங்கி துப்பாக்கி மற்றும் ரஷ்ய தயாரிப்பான 12-போர் (12-bore) ரக துப்பாக்கி மூலம் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இத்தகைய சக்திவாய்ந்த துப்பாக்கிகளும் வெடிமருந்துகளும் சிறைச்சாலை போன்ற அதிஉயர் பாதுகாப்புப் பகுதிக்குள் முன்கூட்டியே கொண்டு வந்து மறைத்து வைக்கப்பட்டிருந்தமையானது, இந்த சதித்திட்டத்தின் கொடூரத் தன்மையைக் காட்டுகிறது.
எவ்வாறாயினும், சிறைச்சாலை அதிகாரிகள் இந்தச் சூழ்நிலையைக் கையாண்ட விதம் குறித்து துறைசார் நிபுணர்கள் தங்களது கடுமையான அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.
இறுதி தருணம்..
மோதல் தீவிரமடைந்து உயிரிழப்புகள் ஏற்படும் வரை பொலிஸாரையோ அல்லது இராணுவத்தையோ அழைப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், நிலைமை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறிய கடைசி தருணத்திலேயே பாதுகாப்புப் படையினர் உள்ளே நுழைய அனுமதிக்கப்பட்டனர் எனவும் குற்றம் சாட்டப்படுகிறது.

உளவுத்துறை மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அதிகாரிகள் தயாராக இருந்ததால் சேதங்களைக் குறைக்க முடிந்தது என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த குமார அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இருப்பினும், நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள், தற்காலிக பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்னவின் உத்தரவின் பேரில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஷானி அபேசேகரவின் நேரடி மேற்பார்வையின் கீழ், விசேட சிஐடி குழுவினர் நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு வருகை தந்து விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மோதலுக்குத் தலைமை தாங்கியதாக சந்தேகிக்கப்படும் சுரேஷ் என்ற கைதி தற்போது வேறு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் பிரேதப் பரிசோதனைக்காக நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையின் தலைமை சட்ட வைத்திய அதிகாரி மருத்துவர் டபிள்யூ.ஏ.எஸ்.ஆர். விக்ரமாராச்சி தலைமையில் ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டு, உடல்களைப் பரிசோதிக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
140 - 145 வேகத்தில் பந்துவீசக்கூடியவர் எங்களிடம் இல்லை: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri
ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று News Lankasri