இலங்கையின் நீதித்துறையானது சுதந்திரமானதும் சுயாதீனமானதும் அல்ல: சந்தியா எக்னெலிகொட
இலங்கையின் நீதித்துறையானது சுதந்திரமானதும் சுயாதீனமானதும் அல்ல என பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளரும், மனித உரிமை செயற்பாட்டாளருமான பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீதித்துறையில் எப்போதும் செல்வாக்கு செலுத்துவதை நான் போதுமான அளவு கண்டிருக்கிறேன். நீதித்துறை செயலற்றதாகிவிட்டது, நீதிபதிகள் தங்கள் அதிகாரங்களை சுதந்திரமாக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
ஜெனிவா அமர்வுகள்
ஜெனிவா அமர்வின் போது, இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமற்ற தண்டனையிலிருந்து விடுபடும் கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளதால், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதியை வழங்க முடியாதுள்ளது.
தண்டனை விலக்கு என்பதை அதிகாரபூர்வமற்ற கொள்கையாக ஏற்றுக்கொண்ட ஒரு நாட்டில், வறுமை, மிரட்டல்களுக்கு மத்தியில், பாதிக்கப்பட்டவர்கள் இப்போது செய்யக்கூடிய ஒரே விடயமாக ஒரு செயலில் ஈடுபடும்போது அழுது புலம்புவது மட்டுமே.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சி
இலங்கையில், சில அரசியல் குழுக்கள், குறிப்பாக ராஜபக்சவின் பாதுகாப்பு படைகளின் சில பிரிவுகள் அல்லது அவர்களுக்கு விசுவாசமான இராணுவக் குழுக்கள், தங்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்தும் மக்களை ஒடுக்கவும் கடத்தவும் பயன்படுத்துகின்றன.
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் இராணுவத்தினரால் கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக காணாலாக்கப்பட்ட எனது கணவர் பிரகீத் எக்னெலிகொடவுக்கும் இது பொருந்தும்.
அவர் கடத்தப்படுவதற்கு முன்னர், ஆயுதப் போரின் போது வடக்கு, கிழக்கில் இலங்கை இராணுவம் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியது குறித்து தகவல்களை சேகரித்து வந்தார்.
மக்கள் உரிமைகள்
இலங்கையின் அரசியல் உயர் மட்டம், குடிமக்களைக் கட்டுப்படுத்தவும், அவர்களை துன்புறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் அடையாளங்களை கண்டறியவும் இராணுவ வீரர்களை பயன்படுத்தினார்கள்.
மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடுவது அவசியமாகிவிட்டது.
இந்த நிலையில் எங்கள் உரிமைகளுக்கான பயணம் தேசிய மற்றும் சர்வதேச அரசியலில் இருந்து பிரிக்க முடியாதது.
மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் எந்தவொரு பரிந்துரைகளுக்கும் இலங்கை கட்டுப்பட
வேண்டும் என்றும் தேசிய அரசியல் குழுக்கள் எதிர்ப்பாளர்களை பாதுகாப்பதற்கு செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.