கொழும்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களில் கோவிட் பரவும் ஆபத்து அதிகம்
இலங்கையில் கோவிட் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை எதிர்வரும் நாட்களில் இந்தியாவின் தற்போதைய நிலைமை போல் பாரதூரமானதாக இருக்கும் என பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் எச்சரித்துள்ளது.
கொழும்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் கோவிட் வைரஸ் அதிகளவில் பரவும் ஆபத்து இருப்பதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தினமும் மேற்கொள்ளப்படும் கோவிட் பரிசோதனைகள் குறைக்கப்பட்டுள்ளதுடன் தினமும் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளை 10 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும்.
புத்தாண்டு காலத்தில் பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பின்றி நடந்து கொண்டதால், கோவிட் பரவல் எதிர்வரும் தினங்களில் அதிகரிக்கக்கூடும் எனவும் உபுல் ரோஹன எச்சரித்துள்ளார்.
இதனிடையே எதிர்வரும் மாதங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா கூறியுள்ளார்.
முகக்கவசம் இன்றி வீட்டுக்கு வெளியில் செல்ல வேண்டாம் என அவர் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கண்டறியப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களுக்கு நோய் அறிகுறிகள் தென்படுவது குறைந்துள்ள போதிலும் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு அமைய தொற்றாளர்கள் எண்ணிக்கை திடீரென அதகரித்தால், நாட்டை திறந்து வைத்திருப்பது கூட ஆபத்தானது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.