நெருக்கடிக்குள் சிக்கி தவிக்கும் இலங்கையை காப்பாற்ற இந்திய யாசகர் செய்த நெகிழ்ச்சி செயல்
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தமிழகத்தின் தூத்துக்குடியில் யாசகர் ஒருவர் சேகரித்த பணத்தினை இலங்கை தமிழர்களுக்கு அனுப்பிவைக்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தூத்துக்குடியில் யாசகம் பெறும் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்த 50 வயதான பூல்பாண்டி என்ற நபரே இவ்வாறு யாசகம் எடுத்து இந்த நெகிழ்ச்சி செயலை செய்துள்ளார்.
கோவிட் தொற்று பரவல் காரணமாக தூத்துக்குடிக்குத் திரும்ப முடியாத நிலையில், மதுரையில் தங்கி யாசகம் எடுக்கும் பணத்தில், கோவிட் நிவாரண, முதலமைச்சரின் நிதிகளுக்கு 51 தடவைகளாக 5 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாவினை வழங்கியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளன்று ஏழைகளுக்கு உதவி செய்வதற்காக நிதி வழங்கலாம் என்று 50 ஆயிரம் ரூபாவுடன் 52ஆவது தடவையாக வந்துள்ளார்.
இதன்போது இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்ய வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், தான் சேகரித்த அந்த பணத்தை முதலமைச்சர் நிதிக்கு வழங்கிவிட்டதாகவும், அந்த பணம் இலங்கை தமிழர்களுக்கு சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



