இணையவழியில் கல்வி நடவடிக்கை! இலங்கையில் நடைமுறைக்கு வரும் திட்டம்
அனைத்து பல்கலைக்கழக விரிவுரைகளையும் இணையவழி மூலமாக நடத்துமாறு பல்கலைக்கழக மானியக் குழு, துணைவேந்தவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலையைக் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், கல்விச் செயற்பாடுகளை தடையின்றி தொடர்வதை உறுதி செய்யும் நோக்குடனும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் வசந்த லியனகே தெரிவித்துள்ளார்.
வீட்டில் இருந்து கற்க முடியும்..
இணைய வழி கல்வி நடவடிக்கையின் மூலம் பயணங்களின் தேவையையும் குறைக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழக மானியக் குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் வசந்த லியனகே இது குறித்து தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பயண மற்றும் எரிபொருள் நுகர்வுச் சுமையைக் குறைப்பதற்காக, தற்போது பல்கலைக்கழகக் கல்விப் பணியாளர்கள், முடிந்தவரை புதன்கிழமைகளில் "வீட்டிலிருந்து பணிபுரியும்" அணுகுமுறையைக் கடைப்பிடிக்கவுள்ளனர்.

இருப்பினும், அனைத்துக் கல்விச் செயல்பாடுகளையும் முழுமையாக இணையவழிக்கு மாற்றுவது இன்னும் சாத்தியமில்லாததால், விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் சில நேரடி வகுப்புகளில் தொடர்ந்து கலந்துகொள்ளலாம், மீதமுள்ள விரிவுரைகள் இணையவழியில் நடத்தப்படும்.
மேலும், முடிந்தவரை எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்குமாறும், பணியாளர்களைப் பகிரப்பட்ட வாகனங்கள் மற்றும் குழு ஏற்பாடுகளில் பயணிக்க ஊக்குவிக்குமாறும் பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இணையவழிக் கற்றலுக்காக அனைத்து மாணவர்களும் தங்களது விடுதிகளிலோ அல்லது வீடுகளிலோ தங்க வைக்கப்படுவது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று பேராசிரியர் லியனகே தெளிவுபடுத்தினார். இது தொடர்பான மதிப்பீடுகள் தொடர்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், நிலைமை மோசமடைந்தால், கோவிட்-19 பெருந்தொற்றின் போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் போலவே, மாணவர்கள் தங்கள் படிப்பைத் தொடர வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஒரே நாளில் நிகழும் ராகு-கேது நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் இறுதியில் ஜாக்பாட் இந்த ராசிகளுக்கு தான்! Manithan