சட்டவிரோதமாக கடற்றொழில் ஈடுபடுவோர் அகற்றப்பட வேண்டும் : அ.அன்னனராசா (Video)
முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படும் கடற்றொழில் நடவடிக்கையினை கட்டுப்படுத்த கோரியும் அதற்கு உந்தையாக இருக்கும் அதிகாரிகளை இடமாற்றக் கோரியும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இக் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (06.10.22) நான்காவது நாளாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த போராட்டத்திற்கு யாழ். மாவட்டத்தினை சேர்ந்த கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சம்மேளன பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஆதரவினை தெரிவித்துள்ளார்கள்.
இதன்போது கடற்றொழிலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சங்க சம்மேளன தலைவர் அ.அன்னனராசா,
சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபடுவோர்
“வடமாகாணத்தில் இருந்து சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபடுவோர் முற்றாக அகற்றப்பட வேண்டும். முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களின் போராட்டம் வெற்றி பெறுவதற்கும் எதிர்காலத்தில் கடலின் உரிமையினை பெற்றுக்கொள்வதற்காக நாங்கள் ஆதரவு தருகின்றோம்.
போர் முடிவடைந்த பின்னர் முல்லைத்தீவு மாவட்டம் பல்வேறு பட்ட சட்டவிரோத தொழில்களால் பாதிக்கப்பட்டு வருகின்றது.
2012 ஆம் ஆண்டு தொடக்கம் சட்டவிரோத தொழில் நடவடிக்கைக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றோம். முல்லைத்தீவு மாவட்டம்தான் அதிகபட்ச பிரச்சினையினை முகம் கொடுத்து வருகின்றது.
கடற்றொழில் சமூகம் பாதிப்பு
இந்த மாவட்ட மக்களுக்கும், கடற்றொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு அவர்கள் எடுக்கும் நடவடிக்கைக்கு யாழ். மாவட்டம் தொடர்ந்தும் ஆதரவு தரும்.
வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத தொழிலாளர்களின் கை ஓங்கி நிற்கும் என்றும் ஏனைய கடற்றொழிலாளர்கள் சமூகம் பாதிக்கப்படுகின்றது.
ஏனைய முதலாளி வர்க்கம் மேல் உயர்வதற்குமான வாய்ப்புக்கள் தான் இருக்கின்றது என்று ஏற்கனவே நாங்கள் சொல்லி இருந்தோம்.
எங்கள் கடல்வளத்திணை எங்கள் எதிர்கால சந்ததிக்கு பாதுகாத்து கொடுக்க வேண்டிய பொறுப்பு இருக்கின்றது.
முல்லைத்தீவில் சட்டவிரோதமான தொழிலினையும் செய்துகொண்டு எங்கள் பாரம்பரிய கடற்றொழிலாளர்களையும், கடற்றொழிலாளர்கள் எதிர்க்கின்றவர்களையும் ஒரு வன்முறைக்கு உட்படுத்துவதற்கு எடுத்த முயற்சியினை யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சமூகம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
சட்டவிரோத தொழிலாளர்கள் வடக்கு மாகாணத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் அகற்றும் வரை நாங்கள் ஒன்றுபட்டு ஒற்றுமையாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மாவட்டம் ஒன்றாக செயற்பட்டால்தான் வெற்றி பெற முடியும்.
முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்திற்கு முன்பாக நேற்றுவரை (05.10.22) போராட்டம் மேற்கொண்டவர்கள் பொலிஸாரின் மற்றும் இராணுவத்தின் அச்சுறுத்தல் காரணமாக அவர்களின் போராட்ட இடத்தினை அருகில் உள்ள கடற்கரைக்கு முன்பாக மாற்றியுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.