''இனி விடுதலைப்புலிகளின் தலைவருக்கு வீரவணக்கம் செலுத்துவோம்'': விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு
''இனி விடுதலை சிறுத்தைகள் கட்சி, விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் அவருக்கு வீரவணக்கம் செலுத்துவோம்'' என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளன் தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
''அடுத்த ஆண்டு முதல் அதை நாங்கள் பின்பற்றுவோம்'' எனவும் இதன்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இனப்படுகொலை
“விடுதலை சிறுத்தைகள் கட்சி சர்வதேச இனப்படுகொலை பெருந்துயர நாளை நினைவுக்கூர்ந்து வருகின்றோம். புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் சொந்தங்கள் உண்மையான எதிரிகளை அடையாளம் காண்பதும், அவர்களை எதிர்கொள்வதும் மிக முக்கியமானது என்பதை உணர்ந்து ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கு உரிய முனைப்பில் ஈடுபட வேண்டும்.
பிரபாகரன் அவர்கள் உயிருடன் இல்லை
அத்தகைய ஒற்றுமையை கட்டமைப்பதற்கு உலகம் எங்கும் வாழும் தமிழ் சொந்தங்களோடு விடுதலை சிறுத்தைகள் கட்சி களத்தில் கைகோரத்து நிற்போம் என்பதை இந்த நாளில் அறிவிப்பு செய்கின்றோம்.
மேதகு பிரபாகரன் அவர்கள் உயிருடன் இல்லையென்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வலுவாக நம்புகிறது. அவருடன் களத்தில் நின்ற தளபதிகள் குறிப்பாக பொட்டம்மான் போன்றவர்கள் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் களப்பலி ஆகியிருக்கின்றார்கள், மாவீரர் ஆகியுள்ளனர் என்று நம்புகின்றோம். அந்த மாவீரர்களுக்கு இந்நாளில் எமது வீர வணக்கத்தை செலுத்துகின்றோம்'' என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |