இலங்கை மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்ற பிரதிநிதி குழுக்களுக்கிடையில் மெய்நிகர் உரையாடல்!
இலங்கை நாடாளுமன்றத்தின் பல கட்சி பிரதிநிதிகள் குழுவும், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தெற்காசிய நாடுகளுடனான உறவுகளுக்கான பிரதிநிதிகள் குழுவும், அண்மையில் மெய்நிகர் உரையாடல் ஒன்றை நடத்தியுள்ளது.
கூட்டத்திற்கு இலங்கையின் சார்பில் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் நிக்கோலா ப்ரோகாசினி ஆகியோர் தலைமையேற்றிருந்தனர்.
விசேட மெய்நிகர் உரையாடல்
கடந்த 2017 நவம்பரில் கொழும்பில் நடைபெற்ற தனிப்பட்ட சந்திப்பின் பின்னர் இரண்டு நாடாளுமன்றங்களுக்கு இடையில் இடம்பெற்ற முதல் உரையாடலாக இந்த மெய்நிகர் சந்திப்பு அமைந்திருந்தது.
இலங்கை-ஐரோப்பிய ஒன்றியப் பங்காளித்துவத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, மனிதாபிமான உதவிகள் உட்பட சமூக-பொருளாதார மீட்சியின் செயல்பாட்டில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுதியான ஆதரவை வரவேற்றுள்ளார்.
அத்துடன் கடன் மறுசீரமைப்பு மற்றும் கடனாளர்களுடனான விவாதங்கள் குறித்தும் விளக்கமளித்துள்ளார்.
அரசியலமைப்பின் 21வது திருத்தம் உட்பட இலங்கையின் சமீபத்திய அபிவிருத்திகள் குறித்தும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ரத்து செய்தல், கைதிகளின் விடுதலை மற்றும் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளில் ஒட்டுமொத்த முன்னேற்றம் என்பன குறித்தும் அவர் விபரித்துள்ளார்.