பாரிய வெள்ளம் ஏற்படும் என எச்சரிக்கை - பல பகுதிகளில் நீரில் மூழ்கும் அபாயம்
நாட்டில் நிலவும் சீற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளில் பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்படும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
அதற்கமைய அடுத்து வரும் 48 மணித்தியாலங்களில் களனி கங்கை ஆற்றுப்படுகையின் தாழ்நிலப் பகுதிகளுக்கு பாரிய வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எஹெலியகொட, நோர்வூட், யட்டியாந்தோட்டை, கலிகமுவ, ருவன்வெல்ல, புலத்கொஹுபிட்டிய, தெஹியோவிட்ட, சீதாவக்க, தொம்பே, பாதுக்கை, ஹோமாகம, கடுவலை, பியகம, கொலன்னாவ, களனி, வத்தளை மற்றும் கொழும்பு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட களனி கங்கை ஆற்றுப்படுகையின் தாழ்நிலப் பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கங்கையின் நீர்மட்டம்
களனி கங்கை ஆற்றுப்படுகையின் நீரேந்துப் பகுதிகளில் பல இடங்களில் தற்போது அடைமழை பெய்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில், அதிலிருந்து அதிகளவான நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலைமையால் உயிர்கள் மற்றும் உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்ள மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அப்பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களிடமும், அப்பிரதேசங்கள் ஊடாக பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகளிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.