வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஐ.நா. குழுவின் அமர்வில் ஆய்வு
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஐ.நா. குழுவின் 29 ஆவது அமர்வில் நாளைமறுதினம்(26) இலங்கை நிலைமை தொடர்பில் ஆராயப்படவுள்ளது.
ஜெனிவாவில் நேற்றுமுன்தினம்(22) ஆரம்பமாகிய இந்த அமர்வு எதிர்வரும் ஒக்டோபர் 2 ஆம் திகதி வரை நடைபெறுகின்றது.
காணாமல் போதல்
இதன்போது இம்முறை அது மொண்டெனேகுர, பெனின் மற்றும் இலங்கை ஆகிய மூன்று நாடுகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நிலைமை தொடர்பாக மதிப்பாய்வு செய்யும்.
இந்த அமர்வில் காணாமல்போனவர்களுக்கு அஞ்சலி செலுத்துதல் இடம்பெறும்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜெனிவாவில் நடைபெற்ற கட்டாயமாக காணாமல் போதல் தொடர்பான முதல் உலக மாநாட்டின் காணொளி காட்சிப்படுத்தப்படும்.
ஐ.நா. குழுவின் அமர்வு
இலங்கை தொடர்பான விடயம் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை, பின்னர் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை என மொத்தம் ஆறு மணி நேரம் நடைபெறும்.
அரசு சாரா நிறுவனங்களிடமிருந்து அந்தந்த நாட்டு அறிக்கைகள் மற்றும் பிற சமர்ப்பிப்புகளைப் பெற்றுள்ள இந்தக் குழு, சம்பந்தப்பட்ட நாட்டின் பிரதிநிதிகளுடன் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கும்.
ஜெனிவாவின் பலாய்ஸ் வில்சனில் உள்ள முதல் மாடி மாநாட்டு அறையில் இந்த அமர்வு நடைபெறும்.
அனைத்து பொதுக் கூட்டங்களும் அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்களுக்கும், ஐ.நா. வலை தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்புக்கும் திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.



