போராட்டம் தவறு என்றால் போராட்டத்தின் விளைவாக உருவாகிய புதிய ஆட்சிக் கட்டமைப்பும் தவறு: மு.சந்திரகுமார்
மக்களின் இந்த போராட்டம் தவறு என்றால் போராட்டத்தின் விளைவாக உருவாகிய இந்தப் புதிய ஆட்சிக் கட்டமைப்பும் தவறு என்று அர்த்தமாகி விடும் என சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக ரீதியில் போராடியவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமை தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலே இதனை தெரிவித்துள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
அவசரகாலச் சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டம்
ஜனநாயக ரீதியில் போராடுவோரை அவசரகாலச் சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்ற அடக்குமுறைச் சட்டங்களால் சிறையில் அடைப்பது தவறு எனவும் அப்படிச் செய்தால் அது நாட்டில் மிக மோசமான எதிர் விளைவுகளையே உண்டாக்கும்.
பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதாகக் கூறிக் கொண்டு மறுவளத்தில்
அரசியல் நெருக்கடியை உருவாக்கக் கூடாது.
அப்படிச் செய்தால் அதற்காக மிகப் பெரிய விலையை நாடு செலுத்த வேண்டியிருக்கும்.கடந்த கால அனுபவத்தை மீட்டுப் பார்த்தால் இதனைப் புரிந்து கொள்ள முடியும்.
ஜனநாயகப் போராட்டங்களுக்கு இடமளித்தால் வன்முறைச் செயற்பாடுகளோ அதற்கான சூழலோ உருவாகாது. ஆகவே அரசாங்கம் அத்தகைய தவறுகளுக்கு இடமளிக்காமல், செயற்படுவது அவசியமாகும்.
எனவே ஜனநாயக வழியில் போராடியோரைச் சிறையில் அடைத்துப் பழிவாங்குவதை விடுத்து உரியவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
அவர்கள் மக்கள் நிலை நின்று பகிரங்கமாக முன்வைத்த கோரிக்கைகளின் நியாயத்தன்மையைப் புரிந்து கொண்டு நாட்டின் நெருக்கடியைத் தீர்ப்பதே மிகப் பொருத்தமான வழிமுறையாகும் என்று சமத்துவக் கட்சி கேட்டுள்ளது.
காலிமுகத்திடல் போராட்டக்களம்
“மிக வெளிப்படையான முறையிலேயே கொழும்பு நகரில் 100 நாட்களுக்கும் மேலாக மக்கள் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பல்வேறு மக்கள் அமைப்புகளும் பல்லாயிரக்கணக்கான மக்களும் பங்குபற்றினர்.
தம்மால் தாங்கிக் கொள்ள முடியாத பொருளாதார நெருக்கடி, அரசியல் நெருக்கடி போன்றவற்றுக்குத் தீர்வு கிட்ட வேண்டும். அதற்கான ஆட்சிக் கட்டமைப்பு வேண்டும் என்று கேட்டே மக்கள் போராடினர்.
அந்தப் போராட்டத்தின் விளைவே இன்றைய புதிய ஜனாதிபதியும் பிரதமரும் புதிய அமைச்சரவையும் ஆட்சிக்கட்டமைப்புமாகும்.
புதிய ஆட்சிக் கட்டமைப்பு தவறு
இந்தப் போராட்டம் தவறு என்றால் போராட்டத்தின் விளைவாக உருவாகிய இந்தப் புதிய ஆட்சிக் கட்டமைப்பும் தவறு என்று அர்த்தமாகி விடும்.
ஆனால், புதிய ஆட்சிக் கட்டமைப்பை ஏற்றுக் கொண்டுள்ள ஜனாதிபதியும் ஆட்சியாளர்களும் அதற்கு வழிசமைத்த போராட்டத்தையும் போராட்டத்தை முன்னெடுத்தோரையும் தவறு எனச் சித்தரித்து அடக்குவது பிழையானதாகும்.
எந்த மக்கள் போராட்டத்தின்போதும் மக்கள் மிக உணர்ச்சிகரவே செயற்படுவர் என்பது உலகளாவிய அனுபவமாகும். அதுவே இங்கும் நிகழ்ந்துள்ளது.
தாம் சந்திக்கின்ற நெருக்கடிகளுக்கு காரணமான ஊழல், அதிகார துஸ்பிரயோகம், முறையற்ற திட்டமிடல்கள் போன்றவற்றுக்குப் பொறுப்புடையவர்கள் எனக் கருதியே சிலருடைய உடமைகளை அவர்கள் அழிக்க முற்பட்டனர்.
இது தவறாக இருந்தாலும் மக்களுடைய இத்தகைய உணர்ச்சி நிலையின் தன்மை இப்படித்தானிருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதேவேளை இவை எதுவும் திட்டமிட்ட அடிப்படையில் தொடர்ச்சியாக நடைபெறவில்லை என்பதை இந்தச் சம்பவங்களைக் கூர்மையாக அவதானித்தால் புரிந்து கொள்ள முடியும்.
ஆகவே மக்கள் போராட்டத்தின்போது நடந்த உணர்ச்சிகரமான விடங்களை அதே உணர்ச்சிகரமான நிலையில் அரசாங்கமும் அணுக முற்படுவது பொருத்தமானதுமில்லை. புத்திசாலித்தனமானதும் அல்ல. அப்படிச் செய்தால் அது மேலும் பல நெருக்கடிகளை உண்டாக்கும்.
இந்த அரசாங்கம் நெருக்கடிகளைத் தீர்ப்பதிலேயே அதிக கரிசனையைக் கொண்டுள்ளதாக நாம் நம்புகிறோம். அப்படியிருக்கும்போது அதற்கு எதிர்வளமாக எந்தக் காரணம் கொண்டும் நெருக்கடிகளை உருவாக்குவதாக எந்த நடவடிக்கையும் அமையக் கூடாது என்று வலியுறுத்துகிறோம்.
ஜனநாயக ரீதியான போராட்டத்தை அடக்க வேண்டாம்
இதனைப் புரிந்து கொண்டபடியால்தான் ஜனநாயக ரீதியான போராட்டத்தை அடக்க வேண்டாம்.
ஒன்று கூடும் மக்களுடைய உரிமை, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல் விடுக்கக் கூடாது என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் தொடக்கம் அனைத்துத் தரப்பினரும் தமது கண்டனங்களை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஆகவே யதார்த்த நிலைமைகளைப் புரிந்து கொண்டு அரசாங்கம் நீதியாக, ஜனநாயக வழிமுறையில் நடக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
May you like this Video




