கெஹெல்பத்தர பத்மே தொடர்பில் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்ட விசேட அறிக்கை
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இந்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டு குற்றப் புலனாய்வுத் துறையின் காவலில் வைக்கப்பட்டுள்ள ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான கெஹெல்பத்தர பத்மே தொடர்பான விசாரணை அறிக்கையை நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கை இன்று (19) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் துறை
குற்றப் புலனாய்வுத் துறை, நீதிமன்றத்திற்கு அறிக்கையை சமர்ப்பிக்கும் போது, சம்பந்தப்பட்ட சந்தேக நபர் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மேலும், கணேமுல்ல சஞ்சீவவின் கொலையில் இந்த சந்தேக நபருக்கு தொடர்பு உள்ளதா என்பதை அறிய மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரை நீதவான் எவரேனும் பார்வையிட்டனரா என்று இன்றைய வழக்கு விசாரணையில் நீதவான் பொலிஸாரிடம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த விசாரணை அதிகாரிகள், கோட்டை நீதவான் சந்தேக நபரை கண்காணிப்பை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதன்படி, இந்த சந்தேக நபரிடம் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு அதன் முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்கு தெரிவிக்குமாறு விசாரணை அதிகாரிகளுக்கு மேலதிக நீதவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.



