போதைப்பொருளை கட்டுப்படுத்த விசேட புலனாய்வு குழு! 5 நாட்களில் 5 பேர் கைது
மட்டக்களப்பில் அமைக்கப்பட்ட விசேட புலனாய்வு குழுவினரால், 5 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த கிழக்கு பிராந்திய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ராஜித ஸ்ரீ தமிந்த ஆலோசனையில் விசேட புலனாய்வு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் பாவனை
குறித்த பிரதேசத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை காரணமாக பல்வேறு குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இதனைதொடர்ந்து பிரதி பொலிஸ் மா அதிபர் மாவட்டத்திலுள்ள பொலிஸ் புலனாய்வு பிரிவில் இருந்து 10 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்து அவர்களுடன் விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸார் இணைந்து ஏறாவூர் பகுதியில் விசேட நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளனர்.
5 பேர் கைது
குறித்த குழு அமைக்கப்பட்டு 5 தினங்களில், வியாபாரத்திற்காக ஐஸ் போதைப்பொருளை ஏற்றி வந்த ஏறாவூர் - கொழும்பு பேருந்து சாரதி ஒருவரை 470 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளதுடன் இதுவரையில் 5 பேரை போதைப்பொருளுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.