மட்டக்களப்பில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்தில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கோவிட் தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 20வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இன்று காலை முதல் முன்னெடுக்கப்படுகின்றன.
களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.இராஜேந்திராவின் தலைமையில் இன்றைய தினம் பெரியகல்லாறு, செட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் பெரியகல்லாறில் உள்ள அருளானந்தர் வித்தியாலயம், உதயபுரம் தமிழ் வித்தியாலயம் ஆகியவற்றில் இன்றைய தினம் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.
இதன்போது பெருமளவான இளைஞர், யுவதிகள் ஆர்வத்துடன் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருந்ததை காணமுடிந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் இன்றயை தினமும் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசிகள் வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்தார்.