இலங்கை அமைச்சர்களை அழைத்த தென்னாபிரிக்க அரசாங்கம் மீது அதிருப்தி!
போர்க் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை அதிகாரிகளுக்குத் தென்னாபிரிக்க அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளமை தொடர்பில் தென்னாபிரிக்க மனித உரிமைக் குழுக்களின் கூட்டமைப்பு தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி மற்றும் நீதி, சிறை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஆகியோரின் தென்னாபிரிக்க பயணம் தொடர்பிலேயே இந்த அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
1983-2009 காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு குற்றவியல் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் தவறியமை மற்றும் இலங்கையில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்கள், சிவில் சமூகத்தை அடக்குதல் போன்றவற்றுக்கு அப்பால், இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தென்னாபிரிக்க மனித உரிமைக் குழுக்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சர்வதேச குற்றங்கள்
அத்துடன், அமைச்சர்களான அலி சப்ரி மற்றும் விஜயதாச ராஜபக்ச, ஆகியோர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டுள்ளனர்.
இந்தநிலையில், கோட்டாபய ராஜபக்ச கடுமையான சர்வதேச குற்றங்களில் சிக்கியுள்ளார். இந்த ஆண்டு ஜனவரியில் கனடாவால் தடைவிதிக்கப்பட்ட நான்கு இலங்கையர்களில் அவரும் ஒருவர் என்பதையும் தென்னாபிரிக்க அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, 2015ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள நான்கு நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகளில் மூன்றை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதற்குத் தவறியுள்ளது.
நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலைமாறு கால நீதிப் பொறிமுறையானது காணாமல் போனவர்களின் அலுவலகம் மாத்திரமே. எனினும், அதுவும் காணாமல் போன தமிழ் குடும்பங்களுக்குப் பதில்களை வழங்கத் தவறியதற்காக விமர்சிக்கப்பட்டுள்ளதாக தென்னாபிரிக்க அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
தென்னாபிரிக்க கூட்டமைப்பு
இந்தநிலையில், மனித உரிமை மீறல்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் கருத்து வேறுபாடுகள் மற்றும் அடக்குமுறைகளைத் தொடர்ந்து ஒடுக்குதல் ஆகியவற்றுக்கான நடைமுறையில் உள்ள தண்டனையை இலங்கை அரசாங்கம் முடிவுக்குக் கொண்டுவருவதை உறுதிசெய்ய தென்னாபிரிக்க அரசாங்கம் இலங்கையிடம் வலியுறுத்தவேண்டும் என்றும் தென்னாபிரிக்க கூட்டமைப்பு கோரியுள்ளது.
தென்னாபிரிக்க மனித உரிமைக் குழுக்களின் கூட்டமைப்பின் சார்பில் இது தொடர்பான
அறிக்கையில், மனித உரிமைகளுக்கான அறக்கட்டளை, மனித உரிமைகள் ஊடக மையம்,
வன்முறை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆய்வு மையம், வன்முறை தடுப்பு நிறுவனம்
உட்பட்ட அமைப்புக்கள் கையெழுத்திட்டுள்ளன.